பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16.சதங்கை


நாகர்கோவில் வனமாலிகை 1971 நவம்பரில் ‘சதங்கை' என்ற பெயரில் ஒரு இலக்கியப் பத்திரிகையை ஆரம்பித்தார்.

வனமாலிகை தனது படைப்புத் திறமையை வளப்படுத்திக் கொள்வதற்காகவோ, எழுத்து அரிப்பை அவ்வப்போது தீர்த்துக் கொள்வதற்காகவோ அல்லது அவர் ஒரு இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் என்று பெருமையாகப் பேசிக் கொள்வதற்காகவோ 'சதங்கை' மாதப் பத்திரிகையை நடத்தவில்லை.

தரமான இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தமிழ்நாட்டின் கோடியான குமரி மாவட்டத்திலிருந்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. நல்ல இலக்கியப் பத்திரிகையின் மூலம் தரமான வாசகர்களை ஊக்குவிப்பது அவருடைய நோக்கம்.

அதனாலேயே, ‘சதங்கை - இலட்சிய வாசகர்களின் வழிகாட்டி' என்று பல வருடங்கள் அந்தப் பத்திரிகையில் பொறிக்கப்பட்டு வந்தது. பின்னர் அது இலக்கிய வாசகனின் நண்பன் என்று மாற்றப்பட்டது.

‘சதங்கை இலக்கிய வட்டத்திற்காக, வெளியிடுபவர்- ஆசிரியர் வனமாலிகை' என்ற அறிவிப்பு பத்திரிகையில் வெகுகாலம் வரை நிலைபெற்றிருந்தது.

‘சதங்கை' விகடன் அளவில், ஆரம்ப காலத்தில், 48 அல்லது 56 பக்கங்கள் கொண்டிருந்தது. பிறகு காகித விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி காரணமாக, பக்கங்கள் குறையலாயிற்று. மாதப் பத்திரிகை முதல் இரண்டு வருடங்கள், ஒவ்வொரு மாத முதல் வாரத்திலும் வெளிவந்தது. பின்னர் கால தாமதமும், சில மாதங்களுக்கு (மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு) ஒரு இதழ் என்று வெளிவருவதும் தவிர்க்க இயலாத நிலை ஆயிற்று. அப்புறம், வராமலே நீண்ட காலம் தூங்கிப்போவதும், சதங்கை நின்று விட்டது என்று வாசகர்கள் முடிவு கட்டிவிட்ட நிலையில், திடீரென்று அது புத்துயிர் பெற்று மிக மெலிந்த தன்மையில் வெளிவருவதும் சகஜமாயிற்று.