97 நிகழ்ச்சியால் அறிந்து இன்புறலாம். பழனி மலையை ஆண்டவன் வையாவிக்கோப் பெரும்பேகன் என்னும் மன்னன். அவன் பெரும் வள்ளல். அவனைப் புலவர் கபிலர், வடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் எத்துணை ஆயினும் ஈத்தல் நன்றென மறுமை நோக்கின்றோ அன்றே பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே" (புறம்.141) என்று போற்றுகிறார். கானகத்தில் மயில் ஆடித் திரிந்து வாழும் வழக்கமுடையது. அது போர்த்துக் கொள்ளாது. எதையும் உடுத்திக் கொள்ளாது என்று மன்னன் பேகன் நன்கு அறிவான். எனினும் மழையில் நனைந்து ஆடிக்கொண்டிருந்த மயில் குளிரால் நலியும் என்று எண்ணி வருந்தி மனமிரங்கித் தன் மீதிருந்த விலை உயர்ந்த போர்வையை அதன் மீது போர்த்தி மகிழ்ந்தான். துயர் நீக்கும் மனநிலை, கொடைமடம் பட்ட மனத்தின் செயல், மாட்சிமையுடைதன்றோ? பறம்பு நாட்டை ஆண்டுவந்ந பாரியும் 'கொடைமடம்' பட்ட மனத்தவன். ஒருநாள் முல்லை நிலத்து வழியே தேரில் சென்றுகொண்டிருந்தபோது முல்லைக்கொடியொன்று தரையில் படர்ந்து, போவோர் வருவோரால் மிதிபட்டுச் சிதைந்திருப்பதைப் பார்த்து மனம் வருந்தினான். "அந்தோ! இந்தக்கொடி படர்வதற்குரிய கொழுகொம்பின்றி இங்ஙனம் சீரழிகிறதே" என்று மனங்கனிந்தான். உடனே தான் ஊர்ந்து வந்த மிக அழகான தேரினை அங்கே நிறுத்தி, கொடிகளை அள்ளியெடுத்துத் தேர்மீது படரவிட்டான். இனி அது யார் காலிலும் மிதிபடாது என்ற மனநிம்மதியுடன் தேரின்றி நடந்தான். இது மனப்பாங்கினால் விளைந்த செயல். பேகனும். பாரியும் செய்த செயல்கள் அறிவுடையனவா? எனின் அறிவுடைய செயல் அன்று. 'கொடைமடம்' பட்டதால் விளைந்தது. 'வருந்துகிறதே' என்ற உணர்வு முன்னின்றது. உடனே தன் வயமிழந்து கொடுத்தல் நிகழ்ந்தது. பேகன் போர்வையைத் துறந்தான். பாரி தேரினைத் துறந்தான். உயர்ந்த மனப்பான்மையின் விளைவு. மண்ணில் பிறந்த யாவரும் கடைசி மூச்சு உள்ளவரை உடலாலும் மனத்தாலும் ஒவ் வகையில் செயல்புரிய வேண்டிய கடமை உள்ளது.