26 என்று வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வில் எளிமையும், இனிமையும் இயல்பாகவே அமைந்திருந்தன. சங்கத்தமிழ் இதை நன்கு படம் பிடித்துக் காட்டி உள்ளது. சூரிய வழிபாடு ஒரு குடியினருக்கு மட்டுமே உரியதன்று. சூரியனை அன்றி உலகம் இல்லை என்பதை உணர்ந்தவர் யாவரும் அருக்கனை, அதாவது சூரியனை வழிபட்டு வருகின்றனர். வைகறையில் துயில் நீக்கி, காலைக்கடன் முடித்து. குளித்து, தூய்மையான ஆடையை அரையிலே உடுத்திக்கொண்டு சூரியனைப் பார்த்து வழிபடுதல் இன்றும் காணலாகும் காட்சியாகும். அவரவர் குடிமரபிற்கேற்றவாறு வழிபாட்டு முறைகள் மாறியிருக்கலாம். சூரியவழிபாட்டு முறையைப் பாடும் நற்றமிழ் பாடல் ஒன்று இதோ. ஒற்றைத் திகிரியானை ஓரேழ் பரியானை கற்றைத் கதிரோனைக் கைம்மலரான் - மற்றினியே பொய்கையில் நீராடிப் போற்றிப் புது உளத்தான் வைகறையில் வாழ்த்திடுவோம் நாம் சூரிய வழிபாடு வைகறை வணக்கமாகும். வைகறை வழக்கமாகும். சங்கத்தமிழில் பத்துப்பாட்டில் ஒன்றான தலைமையான பாடல் திருமுருகாற்றுப் படையைப் பாடியவர் தலைமைப் புலவர் நக்கீரர். மன்றாடும் பெருமானிடம் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று தமிழுக்காக மன்றாடிய நக்கீரர் தான் பாடிய திருமுருகாற்றுப்படையில் "உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு" என்றே அடி எடுத்துப்பாடினார். ஒளிவளர் விளக்குமாகி உயிர்வளர் விளக்குமாகி அறிவு வளர்ப்பவன் சூரியநாராயணன். உலகோர் உவக்கும் தத்துவம் ஞாயிறு தத்துவம். வேதமரபினர், நான்மறையாளர், வேதியர் எனப்படுபவர் வேதங்களை விருட்சம் (மரம்) என்றும் காயத்ரி மந்திரத்தை வித்து என்றும் கூறுவர். காயத்ரி மந்திரங்களில் உயர்ந்தது சூரியகாயத்ரி ஆகும். பார்ப்பனர் குடியினர் காலை அந்தியிலும் மாலை அந்தியிலும் நீர்நிலைகளில் மூழ்கி எழுந்து நின்று கதிரவனைப் பார்த்தவாறு காயத்ரி மந்திரம் செபித்து வருவதை இன்றியமையாத நாள் கடமையாகக் கொண்டுள்ளனர். நீர்நிலைகள் அமையாத இடங்களில் அதற்கேற்ற உபாயங்களை மேற்கொண்டு சூரிய காயத்ரி செபித்து மகிழ்வர். சூரியனை மட்டுமே வழிபட்டு வரும் மரபினர் சௌரமதத்தினர் ஆவார். இவர் வேறு எந்தத் தெய்வத்தையும் வழிபடுவதில்லை என்று