134
தமிழ்க் காதல்
134 தமிழ்க் காதல் வீழ்ந்தது. அவள் நாணினாள் யாதும் வினவவில்லை; சினக்கவும் இல்லை. ஏன்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. நெருப்பைத் தொட்டவர்போலக் கையை விதிர்விதிர்த்து, அவ்விடத்து நில்லாதே போய்விட்டாள். மறைத்துப் புதிதாகக் கட்குடித்தவன் மெய்மறந்து வாயால் உண்மையை உளறுதல் போல, என் நிலை யாயிற்று என ஒரு களவு நங்கை, பூவால் களவு வெளிப்பட்டுவிட்டது என்றும், மேல்விளைவு யாதாகுமோ என்றும் நடுங்குகின்றாள். 'கூந்தலுள் பெய்து முடித்தேன்’ என்ற 'உள்' உருபுநடையால் காதலன் சூடிய பூமேல் அவளுக்கு இருந்த காதலும், அதனை மணத்தாலும் அன்னை அறியாதபடி ஒளித்துச் செறிந்து வைத்துக்கொள்ளும் அவள் அறிவுடைமையும் விளங்குகின்றன. 'அன்னை முன் வீழ்ந்தன்று அப்பூ என முன் உருபாற் சொல்லுங்காலை, யாருக்கு மறைக்க வேண்டுமென்று நினைத்தேன், அவருக்கு முன்னே அந்தப்பூ விழுந்ததே என்ற அவள் நடுக்கமும் அச்சமும் தோன்றுகின்றன. கூந்தலின் உள்ளே பூவை மறைப்பானேன்? அது அன்னை முன் வீழ்ந்தக்கால் அஞ்சுதலேன்? குமரி மலரணியாமை * பண்டைத் தமிழ்க் கன்னி மலர்சூடாள் என்பதும், மலர் சூடின் கன்னியாகாள், ஒருவனை வரித்தாள் என்பதும் நம் பழஞ் சமுதாய வழக்கு இக்கருத்து கற்றார்க்கு இன்று வியப்பாகவும் புரட்சியாகவும் தோன்றும், தோன்றக்கூடும். இவ் வழக்கம் இந்நாள் தமிழகத்து இல்லாமையும், இருக்க இயலாமையும் கண்டு பலர் மலைக்கவும் மலைப்பர். தெளிவிற்கு இன்னும் சில சான்றுகள் காண்போம். இரண்டறி கள்விநங் காத லோளே முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன் முள்ளுர்க் கானம் நாற வந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள், கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை, யானே. (குறுந் 312) இரவுக்குறி வந்து செல்லும் தலைமகன் இனி மணந்து கொள்ள வேண்டியதுதான் என்று தன்னெஞ்சிற்குக் கூறும் கருத்துடையது இப்பாட்டு. 'பலமலர்களைச் சூடிக் கமகமவென்று மணம் பரப்பி இரவில் வந்து முயங்கி என்னவளாகின்றாள்; பின்பு சூடிய மலர்களை உதிர்த்துக் கலவியிற் கலைந்த கூந்தலைச் சீர்செய்து, யாதொரு மாறுபாடும் தோன்றாதபடி, காலையில் தன் வீட்டாருக்குக் காட்சியளிக்கின்றாள். எனக்கு ஏற்பவும் தன் சுற்றத்தாருக்கு ஏற்பவும்