318
தமிழ்க் காதல்
காட்டிலும் அவன் நெஞ்சை ஈர்க்கின்றன. நெஞ்சம் அவனினும் முந்தி அவளை அணையப் புறப்பட்டுவிட்டது என்று காதலனது ஆர்வத்தைப் புனைவர் கல்லாடனார்.
19. கழார்க்கீரன் எயிற்றியார்
சங்கத்தின் இருபத்து மூன்று அகப்பெண் புலவர்களுள் ஒருவர் எயிற்றியார். கழார்க்கீரன் என்ற ஆண்பால் அடைப்பெயர் எவ்வுறவினரைக் குறிக்குமோ அறியோம். இவர் இயற்றிய அகப்பாட்டுக்கள் எட்டு, ஏழு கற்பிற்கு உரியவை. பாலைத்தினை பாடுவதில் புதுக்கூர்மையுடையவர் எயிற்றியார். பொதுவாகப் பாலைப்பொருள் பாடும் புலவர்கள் கோடைக்காலமும் பாலைச்சுரமும் பற்றிப் புனைவர் நீரும் நிழலும் இல்லாத வழியில் தலைவன் செல்லுவதை நினைந்து தலைவி பெருந்தயர் உறுவதாகக் காட்டுவர். அத்தனைய பொதுப்போக்கு இப்புலவர் பால் இல்லை. பாலைப்புனைவுக்கு இவர் மேற்கொண்டவை மருதநிலமும் வாடைக்காலமும் ஆம். இவர் பாட்டுக்கள் உரிப்பொருளாற் பாலையேயன்றி முதல் கருப் பொருள்களால் அல்ல. தலைவன் செல்லும் வழியைப் பாடாது தலைவியது தனிமையுணர்ச்சியையே பாடுவர். பச்சென்ற இயற்கைச் செழிப்பும் வாடைக் குளிரும் முன்பனியும் அவளை வருத்துகின்றன.
நாணில மன்றவெங் கண்ணே நாள்நேர்பு
சினைப்பசும் பாம்பின் சூழ்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை அழிதுளி தலைஇய -
பசுங்கரும்பின் காட்சியும், வாடைச்சாரலும், தலைவியின் கண்களை அழச்செய்கின்றன. காலத்திற்கு நெஞ்சிழக்கும் பதத்தவளாகத் தலைமகளைப் பாடுவர் எயிற்றியார். தாம் யாத்த எட்டுப் பாடல்களிலும் (கற்பு 7 களவு 1) தலைவிமேல் காலத்தின் தாக்குதலைச் சுட்டிக்காட்டுவர். கால வயப்பட்டாள் மனைவி என்பதனைக் கணவனும் உணர்ந்திருக்கிறான்.
கோடைத் திங்களும் பனிப்போள்
உடனிருக்கும்போது கோடைக் காலத்திலும் குளிரென நடுங்கும் என் காதலி, குளிர்மிக்க வாடைக்காலத்தே நான் பிரிந்துபோய் விட்டால் என்னாவாள்? என்று நினைக்கின்றான்; பொருள் விரும்பும் நெஞ்சினைக் கழறுகின்றான்.