324
தமிழ்க் காதல்
சுட்டப்படாமை, வேம்பு பாண்டியனுக்கு உரிய அடையாளப்பூ ஆதலின், ஒராற்றால் பாண்டியனைச் சுட்டியதாகக் கொண்டு நக்கீரரின் பாட்டினை அகம் அன்று என்பர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். உரையாசிரியர் கருத்து ஒப்பது என்று வழிவழிப்போற்றியும் கற்பித்தும் விளக்கியும் வருகின்றோம். சிறிது சிந்தனைப்புரட்சி செய்து நூலாசிரியன் கருத்து இது தானா என்று காணலாம். -
வரலாற்றால் வந்த பிழை
நெடுநல்வாடை என்பது பாட்டின் பெயர். பெயரே தூய அகப்பொருள் மணம் கமழவில்லையா? முல்லைப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை என்ற பெயரீடுகளோடு ஒத்திருத்தலை உன்னுக. பாண்டியன் நெடுஞ்செழியனையும் அவன்கோப்பெருந் தேவியையும் மதுரை அரண்மனையையும் அதனொடு போரிட்ட எதிரிகள் எழுவரையும் ஆலங்கானத்துப் பாசறையையும் நினைவில் வைத்துக்கொண்டுதான் நக்கீரர் இப்பாட்டு வரைந்தார் என்பது உண்மை.
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத் தகன்தலை சிவப்ப.
எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்
என்று நக்கீரனாரே பாடியிருக்கும் வரலாற்றுக் குறிப்பையும், பிறர் செழியனைச் சொல்லிய குறிப்புக்களையும் கற்ற நமக்கு அக்கருத்து பாண்டியன் செழியனை உட்கொண்டே நெடுநல் வாடை இயற்றினார் என்ற தொடர்பு தோன்றுவது உண்மை எனினும் அகவிலக்கியமாக ஆசிரியர் பாட விரும்பினார். அவ்விருப்பத்தால் பாட்டுப் பிறந்தது என்ற படைப்புள்ளத்தை நாம் நினையவேண்டும்.
நளிமலைச் சிலம்பிற் சிலம்பும் கோயில் (100)
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் (105-6)
சிலரொடு திரிதரும் வேந்தன்
என்ற அரும் பகுதிகளை ஒர்வோமாக. கோயில் என்றாரேயன்றிப் பாண்டியன் அரண்மனை என்றோ, பெருந்தகை என்றாரேயன்றிச் செழியன் என்றோ, வேந்தன் என்றாரேயன்றிப் பாண்டியன் என்றோ, பலர் என்றாரேயன்றிப் பகைத்த எழுவர்களான சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்றோ, பாசறை என்றாரேயன்றி ஆலங்கானப் போர்க்களம்