பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழ்த் தாத்தா

அப்போது மாநிலக் கல்லூரி முதல்வராக இருந்த பில்டர்பெக் துரையிடம் எடுத்துச் சொன்னார். அவர் உடனே மாநிலக் கல்லூரியிலும் தமிழ் வகுப்புக்கு உயர்ந்த மேடை நல்ல மேசை, நாற்காலி, பீரோ ஆகியவற்றை அமைக்க ஏற்பாடு செய்தார்.

1904-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவேட்டீசுவரன் பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் மாதம் 20 ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டிற்குக் குடி வந்தார். அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிற்றுப்பத்து வெளியிடப்பெற்றது.

1905-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆசிரியப் பெருமானுடைய அன்னையார் சரஸ்வதி அம்மாள் காலமானார்கள். திரு சீனிவாச ஐயங்கார் ஆசிரியருடைய வீட்டிற்குத் துக்கம் கேட்க வந்தார். அச்சமயம் பேச்சோடு பேச்சாக, மணிமேகலைக் கதைச் சுருக்கத்தை எப்.ஏ. வகுப்புக்குப் பாடமாக வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகச் சொன்னார். "இதனால் வருகிற பணம் மாதா கைங்கர்யத்திற்கு இருக்கட்டும்" என்று சொன்னார்.

ஆசிரியப் பெருமானின் வகுப்பிலிருந்த மாணவர்களைச் சில பொறாமைக்காரர்கள் தூண்டிவிட்டு, ஆசிரியர் பாடம் சொல்லும் போது சில இடையூறுகளை ஏற்படுத்தச் செய்தார்கள். ஒரு சமயம் ஒரு துண்டுப் பத்திரிகை வெளியிடப்பெற்றது. அதில், நச்சினார்க்கினியர் தவறு செய்தார்; சங்கராச்சாரியார் தவறு செய்தார்; உ. வே. சாமிநாதையரும் பிழைகளைச் செய்திருக்கிறார் என அச்சிடப் பெற்றிருந்தது. ஒரு மாணவன் மிகவும் வருத்தத்தோடு ஆசிரியரிடம் அந்தத் துண்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்து காட்டினான். அதைப் பார்த்து ஆசிரியப் பெருமானுக்குக் கோபம் வரவில்லை; வருத்தம் ஏற்படவில்லை; புன்னகை பூத்த முகத்துடன், "இந்த எளியேனை அவ்வளவு உயரத்திற்கா ஏற்றிவிட்டார்கள்? சங்கராசாரியாருடனும் நச்சினார்க்கினியருடனும் சமமாக என்னை வைத்தல்லவா சொல்லியிருக்கிறார்?" என்றவுடன் மிகவும் வருத்தத்துடன் அந்தத் துண்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்த மாணவனே வருத்தம் மாறிச் சிரித்துவிட்டான்.


போலீஸ் அதிகாரியின் மனமாற்றம்

திருவேட்டீசுவரன் பேட்டையில் ஜயசிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கொஞ்சம் முரட்டுச் சுபாவம் உடையவர். ஆசிரியப் பெருமான் வாழ்ந்து வந்த தெருவில்தான் அவர் இருந்தார். யாரோ ஒருவர் அவரிடம் காவடிச் சிந்தையும், திருப்புகழையும் பாடியிருக்கிறார் அவற்றிலுள்ள பெண்களின்