சுந்தர சண்முகனார் 61
சூர்ப்பணகையின் செயலைக் கொண்டு ஒரு கருத்துக்குத் தாவலாமா? மக்கள் ஆசையினால்தான் பற்பல செயல்கள் செய்கின்றனர். ஆனால், ஆசை நற்செயல்கட்குத் தூண்டு கோலாய் இருக்க வேண்டும்; தீய செயல்கட்குத் துணை போகக் கூடாது. ஆசை சிலரை ஆட்டிப்படைப்பதனால்தான்,
"ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்" (26.15)
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" (350)
என முறையே திருமந்திரமும் திருக்குறளும் கூறுகின்றன. Necessity is the mother of invention (தேவையே கண்டுபிடிப்பின் தாய்) என்பதற்கு ஏற்ப ஆசை ஊக்க மருந்தாய்ப் பயன்பட வேண்டும். 'இராம காதையை ஆசை பற்றி அறையலுற்றேன் எனக் கம்பர் கூறியது போல, ஆசை தூண்டுகோலாய் - ஊக்க மருந்தாய் இருக்க வேண்டும். ஆசை மருந்தாக உருவகிக்கப்பட்டதால் இவ்வளவு கருத்துக்கும் இடம் உண்டாயிற்று.
ஓயாத ஆசை
அரக்கி காம வேதனையால் தாக்கப்பட்டு உயிர் செயல் பட முடியாதது போன்ற நிலை உண்டாகியும் ஆசையை விடவில்லையாம்.
“ஆவி ஒயினும் ஆசையின் ஒய்விலாள்” (87)
நடந்த நிகழ்ச்சி ஒன்று: செல்வத்தில் மிக்க பற்று கொண்ட பெரிய செல்வர் ஒருவர் அகவை முதிர்ந்து சாவோடு போராடிக் கொண்டிருந்தார். பல நாளாய் உணர்வு அற்றுப் படுக்கையில் கிடந்தார். காசு ஆசையால் அவருக்கு உயிர் போகவில்லை என உறவினர் பேசிக் கொண்டு, காசைக் கல்லில் இழைத்து அந்தச் சாந்தை