இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கல்வி கற்றல்
பேராசிரியர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் தஞ்சைக்கு எட்டுக்கல் தொலைவில் உள்ள நடுக்காவிரியில் வீரப்பழங்குடி மரபாகிய கள்ளர்* வகுப்பில் பிறந்தவர். கள்ளர் மரபினர் சோழரிடம் பல நூற்றாண்டுகளாகப் போர் வீரர்களாகவும் படைத்தலைவர்களாகவும் இருந்தனர். இத்தகைய சீரிய மரபினர் 90-க்கு மேற்பட்ட பட்டங்களைப் பெற்றனர். 'களத்தில் வென்றார்', ‘வாண்டையார்’, 'தேவர்’, ‘இடங்காப் பிறந்தார்', 'சேதிராயர்’, ‘நாட்டார்’, என்பன அப்பட்டங்களுள் சிலவாம்.
- கள் + தல் (கட்டல்) — பறித்தல் ; கள்ளன் - பறிப்பவன்; கள்ள அறை - பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை; பெட்டிமுதலியவற்றில் பிறர் அறியாவகை அமைக்கப்படும் அறை. (Lexicon, vol 2, p. 806, 808) எனவே, கள்ளன் — பிறர் அறியாவகையில் அவரைப்பற்றிய உண்மைகளை அறிபவன் (அறிந்து அரசாங்கத்திடம் தெரிவிப்பவன்). C. I. D, ஒற்றன் எனப் பொருள்கொள்வது பொருத்தமாகும். தமிழரசரிடம் இருந்த 'ஒற்றர்’ என்ற அரசாங்க அலுவலரே கள்ளர் எனப்பட்டனர் என்று கொள்வதே பொருத்த மாகும். இக்கருத்தை எனக்கு அறிவித்த ஆராய்ச்சி அறிஞர் மதுரை மீனாட்சி ஆலை இயக்குநர் திரு. கருமுத்து- தி. மாணிக்கவாசகனார், பி. ஏ. ஆவர்,