65
விவரங்களும் புலவர் கையாண்ட அணிகளும் பிறவும் மொழிநடையும் நாம் அறிந்துகொள்ள இப் புராணங்கள் துணை செய்கின்றன. எனவே, புராணங்களில் கூறப்படும் கதைகளுக்கு மதிப்பைத் தராமல், அவற்றில் காணப்படும் பயன்தரும் செய்திகளையே அறிஞர் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த முறையில் பார்த்தால், புராண இலக்கியம், தமிழிலக்கிய வரலாற்றுக்கும் தமிழர் நாகரிகம், பண்பாடு இவற்றிற்கும் பெருந்துணை செய்ய வல்லது என்று துணிந்து கூறலாம்.
சிறு நூல்கள்
பிற்பட்ட புலவர்கள் சமயத்துறையில் புராணங்கள் பாடியதுபோலவே, சமயத் தொடர்பான உலா, கலம்பகம், கோவை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், இரட்டை மணிமாலை, நான்மணிமாலை முதலிய சிறு நூல்களைப் பாடினர். மதுரைச் சொக்கநாதர் உலா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம், அழகர் கிள்ளைவிடு தூது, திருவேங்கடத்து அந்தாதி, நால்வர் நான்மணிமாலை முதலிய சிறு நூல்களே இக் கூற்றிற்கு ஏற்ற சான்றாகும். தமிழ்ப் புலவர்களேயல்லாமல் கிறித்தவப் புலவர்களும் சமய நூல்களையே செய்தனர். வீரமாமுனிவர் பாடிய தேம்பாவணி, திருக்காவலூர் கலம்பகம் முதலியன இதற்கு ஏற்ற சான்றாம். முசுலிம் புலவர்களும் சீறாப் புராணம், முகையதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் முதலிய சமய நூல்களையே பாடினர். பாளையக்காரர்கள் காலத்தில் 'கூளப்ப நாயக்கன் காதல்' , மடல், சந்திர விலாசம் போன்ற சிற்றின்ப நூல்கள் சில தோன்றின. இவை பாளையக்காரரை இன்புறுத்த எழுந்தவை.
பிற்காலச் சமய நூல்களுள் சித்தர் நூல்கள், தாயுமானவர் பாடல்கள், குமரகுருபரர் பிரபந்தங்கள், சிவப்-