79
கடமை. ஒரு காலத்தில் ஒரு பொருளில் வழங்கிவந்த சொல் பின் நூற்றாண்டுகளில் வேறு பொருள்களை யுணர்த்த வருதலும் உண்டு. இம்முறையில் எழுந்த வையே — ஒரு பொருள் குறித்த பல சொற்கள், பல பொருள் குறித்த ஒரு சொல் — என்பவை. இங்ஙனம் ஆழ்ந்து நோக்குங்கால் மக்கள் வழக்காறுகள் கூறுவது இலக்கணம் என்பது பெறப்படும். மக்கள் பயன்படுத்தும் சொற்களையும் அவற்றின் பல்வேறு பொருள்களை ஆராய்ந்து மக்களுடைய அழுந்திய உச்சரிப்பால் இன்னின்ன எழுத்துக்கள் இன்னின்ன பொருள்களை உணர்த்துகின்றன என்னும் நுட்பங்களையும் அறிந்து இலக்கணம் செய்தல் வியந்து பாராட்டற்குரியது.
மனித வாழ்க்கையை அகம் புறம் என இரண்டாகப் பிரித்தனர் நம் முன்னோர். ஆகவே, அவ்வாழ்வுக்குரிய செயல்களெல்லாம் இலக்கண முறையில் வகுக்கப்பட்டன. அவற்றைக் கூற எழுந்ததே பொருள் இலக்கணம். இங்ஙனம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த மனிதஇனம் தமிழ் இனமேயாகும். இம் மூன்றையும் படிப்பதால் பழங்காலத்திலிருந்த சொற்கள், மக்களுடைய பலதிறப்பட்ட வாழ்க்கை முறைகள், அரசு, போர், சமயநிலை, பழக்க வழக்கங்கள், விழாக்கள், கல்வி முறை, நாகரிகம், பண்பாடு முதலிய அனைத்தும் தெரிந்துகொள்ள வாய்ப்புண்டாகிறது. தொல்காப்பியம் சங்ககாலச் (மேற் கூறப் பெற்ற) செய்திகளை உணர்த்துகின்றது. வீரசோழியமும், நன்னூலும் சோழர்காலச் செய்திகளையும், மொழி நிலையையும் உணர்த்துகின்றது. யாப்பருங்கலவிருத்தி போன்றவை யாப்பிலக்கண வளர்ச்சியை விரிந்த அளவில் தெரி விக்கின்றன.
இலக்கண உரைகள் ஊன்றிப் படிக்கத்தக்கவை. அவை பிற இலக்கியங்களில் காணப்பெறாத அரிய செய்தி-