10. குறிஞ்சிப் பாட்டு
வடநாட்டிலிருந்து ஆரிய அரசன் பிரகத்தன் என்பவன் தமிழ் நாட்டுக்கு வந்தான். பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையை அடைந்து அங்கிருந்த பாண்டிய மன்னனோடு அளவளாவினான். சங்கப் புலவர்களைக் கண்டு பேசினான். தமிழர் நாகரிகத்தையும் அவர்களுடைய இலக்கிய வளத்தையும் அறிந்து கொண்டான்.
பெரும் புலவராகிய கபிலர் அக்காலத்தில் மதுரையில் இருந்தார். பிரகத்தின் அவரோடு பழகினான். தமிழில் உள்ள பொருட் பகுதி மிகவும் சிறப்பான தென்பதை அவன் உணர்ந்தான். ஒருவனும் ஒருத்தியும் அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றிக் காதல் செய்து பிறகு திருமணம் செய்து கொண்டு வாழும் முறையை இலக்கியங்கள் பலபடச் சிறப்பித்துச் சொல்வதைக் கேட்டறிந்தான். களவுக் காதலின் பெருமையை அவன் நன்கு அறிந்தான். இலக்கணத்தில் அந்த நெறியை அடைவு படுத்திச் சொல்லியிருக்கிறார்கள். களவுக் காதலை நன்கு விளக்கும் வகையில் தொடர்ந்த கதை போல அமைத்து ஓர் இலக்கியம் செய்து, தரவேண்டும் என்று கபிலரை வேண்டிக் கொண்டான். தமிழ் நெறியாகிய இந்தக் களவுக் காதலை ஆரிய அரசனுக்கு. உணர்த்துவதற்காக 261 அடிகளில் குறிஞ்சிப் பாட்டு என்ற நூலைப் பாடினார் கபிலர். அது பத்துப் பாட்டில் எட்டாவது நூலாக இணைந்து விளங்குகிறது. அதன்