பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

வி. கோ. சூரியநாரயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

வாயின. அதன் மேற் ‘பிரயோகவிவேகம்’ என்னும் இலக்கண நூல்வகுத்த சுப்பிரமணிய தீக்ஷிதர் வடமொழிச் சத்தசாத்திரத்தைத் தமிழின்கட்கூறித் தமிழ்மொழியோ டொப்பிட்டுச் சீர்தூக்கி யாராய்வாராயினர். பின்னர் ‘இலக்கணக்கொத்துரை’ செய்த ஈசானதேசிகர் வடமொழி யிலக்கணத்தைத் தமிழொடு கலந்தனர்; கலந்தமட்டில் நில்லாது தமது நூற்பாயிரத்தின்கட் கூறிய சில கூற்றுக்கள் அறிவுடையோர் ஒதுக்கற்பாலன வாகின்றன.

“அன்றியுந் தமிழ் நூற் களவிலை, யவற்றுள்
ளொன்றே யாயினு தனித்தமி ழுண்டோ?
அன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவு காணுவ ரறிவுடை யோரே;
ஆகையால் யானு மதுவே யறிக;
வடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியினும்
இலக்கண மொன்றே யென்றே யெண்ணுக”

என்ற விவையனைத்தும் ‘பாஷை நூல்’ என்னும் அரிய சாஸ்திரத்தின் பயிற்சியும் சரித்திரக்கண்ணும் இல்லாத குறைவினாலெழுந்த பொருந்தாக் கூற்றுக்களா மென்பது திண்ணம். இவை கேட்டுப் பேரறிவாளராயினார் நகைத்து விடுப்பரென்பது நிச்சயம். இவர் தேற்றேகார மிரட்டித்துக் கூறியதற்கு மாறாக, ஆசிரியர் சிவஞான சுவாமிகள் தமது ‘தொல்காப்பியப் பாயிரவிருத்தி’ யிலே “தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்டுஞ் செய்கைகளும் குறியீடுகளும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம்புறமென்னும் பொருட்பாகு பாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பாமுதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வட மொழியிற் பெறப்படா” என்று கூறுவாராயினர். இது யாவரும் நன்குணர்ந்தது; தமிழ்மொழியும் வேறே; வடமொழியும் வேறே; இதன்கண் ஐயப்பாடு எள்ளளவு மில்லை.

நன்னூலார் தமது பதவியலினீற்றிலும் மெய்யீற்றுப் புணரியலினீற்றிலும் வடசொல்லாக்கமும் வடசொற் சந்தியும் முறையே கூறுவாராயினர்.

இனிச் சம்ஸ்கிருத மொழியின்கண்ணே பால்வகுப்பும் சொன்னோக்கத்தா லேற்பட்டுளதேயன்றிப் பொருணோக்கத்தா லேற்பட்டிலது. உதாரணமாகக், கையெனப் பொருள்படும் ‘கரம்’ என்றசொல் ஆண்பால்; மனைவியெனப் பொருள்படுஞ் சொற்களிலே, ‘தாரம்’ என்பது ஆண்பால், ‘களத்திரம்’ என்பது அலிப்பால், அஃதாவது ஒன்றன்பால் என ஓராற்றானமைக்கலாம். இவ்வாறுளது வடமொழிப் பால் வகுப்பின் சிறப்பு. மற்றுத் தமிழ்மொழியிலோ பால் வகுப்பெல்லாம் பொரு ணோக்கத்தாலேற் பட்டுளவே யன்றிச் சொன் னோக்கத்தா லேற்படவேயில்லை. இது தமிழ்மொழியின் சிறப்புக்களுள் ஒன்று, வடநூன்முறை குறைபாடுடையது. ஆரிய பாஷைகளோ டியைபுபட்ட