பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

179

பழம்பெரும் புலவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தத்தம் நுண்மதியை விளங்கச் செய்து சென்றனர். அப்புலவர் பெருமக்களின் கலைகளெல்லாம் ஞானியார் சுவாமிகளிடத்தில் மருவி நிற்கின்றன. அம் மருவல் இக்காலத் தமிழகத்தின் திருவென்றே கூறுதல் வேண்டும்.

ஞானியார் சுவாமிகள் மாணாக்கருக்குப் பாடம் சொல்லும் போதும், சொற்பொழிவு நிகழ்த்தும் போதும், தொல் காப்பியனாராகவும், நக்கீரராகவும், திருவள்ளுவராகவும், இளங்கோ அடிகளாகவும், கச்சியப்பராகவும், கம்பராகவும், சேக்கிழாராகவும், வியாசராகவும், நீலகண்டராகவும், சிவ ஞான முனிவராகவும் பிறராகவும் முறையே விளங்கி இலக்கிய இலக்கண சாத்திர நுட்பங்களை வெளியிடுவதைக் கேட்டுக் கேட்டுப் புலவரானவர் பலர். பழம் புலவர் பலரும் ஞானியார் ஒருவரிடம் விளங்குதல் வியப்பன்றோ?

கோவலடிகளின் பேச்சுத் திறத்தை என்னென்று சொல்வேன் ! அதைச் சிறப்பிக்க எனக்குச் சொற்கள் கிடைக்கவில்லை, என் செய்வேன்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவன்மையிற் சிறந்தவர் இருவர் என்று சொல்லப்பட்டனர். அவர் கிளாட்ஸ்டனும் சுரேந்திர நாதருமாவர். அவ்விருவர்தம் நாவன்மை ஞானியார் நாவன்மையைக் கண்டதில்லை; கேட்டதில்லை; கண்டிருப் பின் - கேட்டிருப்பின் வணக்கஞ் செய்திருக்கும்.

சுவாமிகள் அறப்பள்ளித் தலைமை ஏலாது, உலகியலில் நுழைந்து, ஆங்கில நாவராய், உலகை வலம்வந்திருப்பரேல், அவர் கிளாட்ஸ்டனும், சுரேந்திரநாதரும் சேர்ந்த ஒருவர் என்று போற்றப்பட்டிருப்பர். கோவற்பள்ளி, சுவாமிகளைச் சிறைப் படுத்தி விட்டது.

சுவாமிகளின் பேச்சுத்திறனை எதற்கு ஒப்பிடுவது? கடல்மடைத் திறப்புக்கா - வெண்கலக் கோட்டையில் அரசுவா புகுதலுக்கா-பெரும் புயலுக்கா- ஓயா மழைக்கா? எதற்கு - எதற்கு ஒப்பிடுவது? பலர் பலவாறு கூறுப.

திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருந்து அடியவர்க்கருள் புரியும்கோவலடிகள் கருமைபூத்த ஒரு பொறுமை மலை, அம் மலையினுச்சியில் - மூளையில் - கலை மேகங்கள் பொழிந்த அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங்