பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

23


குருநாதர் யார் ?

குருவின் இலக்கணம் என்ன? என்ற கேள்விக்கு நம் முன்னோர் பலபடிகளில் விளக்கம் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று; விருப்பு வெறுப்பு இல்லாதவராய் அருள் நிரம்பினவராய் ஆன்ற அறிவும் தூய சிந்தையும் உடையவராய் எளியவர்களிடம் தனி அன்பு காட்டுபவராய் தம்பரந்த கலையொளியால் எப்பாலவரையும் தம்பால் ஈர்த்து ஆட்கொள்ளும் வல்லமை படைத்தவரே குருநாதராக விளங்க முடியும்.

சிவத்திரு ஞானியாரடிகள் மேற்சொன்ன இலக்கணங்களெல்லாம் வாய்ந்தவராய் விளங்கியதோடு உடல் சாயும் வரையில் தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பாடுபட்டவர் என்பதனை இந்நூலைப் படிப்பவர் அனைவரும் உணர்வர்.

ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்”.

என்னும் குறள்நெறிக்கு இணங்க அடிகளார் வாழ்ந்தவர். ஒழுக்க நெறியைத் தான் கடைப்பிடித்ததோடு பிறரையும் அந்நெறியில் வாழும்படி அல்லும் பகலும் உபதேசித்தவர். வீரசைவமரபினர். திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியாரடிகளின் மடாலயத்தின் முதற்குருநாதர் ஸ்ரீசோமநாத ஆராத்திரியர். இவர் வேத ஆகம புராண இதிகாசங்களை முறையாகப் பயின்றவர். வீரசைவர் கடைப்பிடிக்க வேண்டிய அறுபத்து நான்கு சீலங்களையும் கடைப்பிடித்தவர் சைவ - இட்டலிங்க பூசனை செய்தவர். இவர் வழியில் நான்கு குருமார்களுக்குப் பின்னர் வந்தவர்களே இந்நூலின் நாயகரான சிவத்திரு ஞானியார் சுவாமிகள் என்றே அழைக்கப்பட்ட ஞானியாரடிகளாவார். இவர் இம்மடத்தின் ஐந்தாம் குருமகாசந்நிதானமாவார்.

அண்ணாமலை அய்யருக்கும் பார்வதி அம்மையார்க்கும் செல்வத்திருமகவாய் அவதரித்த நம் சுவாமிகள் தம்முடைய ஆறுமாத குழந்தைப் பருவத்திலேயே நான்காம் குருநாதராக விளங்கிய சுவாமிகளின் அருளுக்கு இலக்காகி அவர் தம் மடத்திலேயே வளர்ந்து வரலானார். குருமகர் சந்நிதானம் அக்குழந்தைக்குப் ‘பழநியாண்டி’ என்ற செல்லப் பெயரிட்டு சிவலிங்க தாரணமும் செய்து வைத்தார் என்ற வரலாறு மற்ற சைவ மடங்களுக்கு இல்லாத சிறப்பு வரலாறு ஆகும்.