பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிவசிவ
ஞானியாரெனும் சமரசச்சமுதாயத் துறவி
பேராசிரியர், 'சிந்தாந்தசரபம்’
டாக்டர் வை. இரத்தினசபாபதி, ஆசிரியர் 'சித்தாந்தம்’

அருளியல் நெறிப்பாட்டுடன் இணைந்த உலகியல் வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன் மனிதன். ஆனால், உலகியல் வாழ்க்கையின் தரத்தினை, ஏற்றத்தாழ்வுகளை வரையறைப் படுத்திப் பார்ப்பது போல அவனால் அருளியல் பின்னணியை வரையறை செய்து பார்த்து மகிழ இயலவில்லை.

உலகியல் வாழ்க்கையானது அவனுக்கு ஏற்றத்தாழ்வுடன் கூடி அமைகிறது. ஆனால், அருளியற் பின்னணியோ அவனுக்கு ஏற்றத்தாழ்வுடன் அமைதல் இல்லை. ஒருபடித்தாக நின்று அவனை நெறிப்படுத்தி வரும் அருளியற் பின்னணியை உணருவதில் அவனுக்கு ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். உண்மையில் அருள் நெறிப் பின்னணியில் ஏற்றத் தாழ்வு அமைதல் இல்லை.

அருள்நெறிப் பின்னணியில் எளியேனுக்குப் பிறப்பிடம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் திருமடம். யான் புகுந்த இடம் மயிலம் சிவத்திரு சிவஞான பாலயசுவாமிகள் திருமடம். அருள்நெறி பின்னணியில் இரண்டும் என்னை இடைவிடாது இயக்கி வருவதையான் வாழ்க்கையில் அனுபவித்து வருகிறேன்.

'ஞானியார்' என்ற ஒரு பெயராலேயே உலகத்து ஞானியார்கள் எல்லாராலும் உணர்ந்தும் தெளிந்தும் ஓதியும் வழிபட்ட ஒப்பற்ற அருளாளரே புலிசைஞானியார் அடிகள்.

ஞானி ஞானி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
ஞானி ஒருவனும் அல்லன்
வாணியும் உண்டு ஈண்டு அறிவு சிறந்தோளே”

என்று அறிஞர்கள் பலரும் புகழ்ந்து கூறும் அளவில் சமரசச் சமுதாயத் துறவியாகத் திகழ்ந்தவர் தவத் திரு ஞானியாரடிகள்.