பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வல்லிக்கண்ணன்

தமிழ் நாடெங்கணும் இறைவனளித்த முத்துச் சிவிகையிலேயே வலம் வந்து ஞானத் தமிழ்பரப்பிய பரசமய கோளரியென விளங்கிய ஞானசம்பந்தப் பெருமான் சிவசாயுச்சியப் பெரு வாழ்வைத் தம்முடன் வந்த அனைவருடனும் சென்று எய்திய வைகாசி மூலத்தில் தான் ஞானியாரடிகள் என்னும் குழந்தை இறைவனால் மீளவும் வருவிக்கப்பெற்றது. சிவிகையூர்ந்து சமயத்தையும் சமுதாயத்தையும் வளர்த்த திருஞான சம்பந்தரேயான் என உலகவர் போற்றுமாறு வாழ்நாள் முழுவதும் சிவிகையூர்ந்தே தமிழையும் சைவத்தையும் வளர்த்ததுடன் எந்த ஒரு சமயத்தையும் கண்டித்துக் கூறுதல், வாதம் செய்தல், போன்ற செயல்களை முற்றாகத் தவிர்த்து, சைவ சமயத்தை மேலும் மேலும் விளக்கமாக எடுத்துக்கூறி மாற்றாரும் மனமகிழ்ந்து ஏற்றுக் கொள்ளுமாறு சமரச உண்மைகளைப் பேசிச் சமுதாயத் தொண்டாற்றிய மாபெருஞ் சாதனையாளர் ஞானியார் சுவாமிகள்.

மனிதனை மனிதன் வணங்குவது தவறு என்றும், அதிலும் மனிதன் காலில் மனிதன் விழுவது தவறு என்றும் நாள்தோறும் மேடையில் முழங்கியும் தம் பத்திரிகையில் விரிவாக எழுதியும் இது என்னுடைய வாழ்வியற் கொள்கை என்று முழங்கியும் வந்த மாமனிதர்கள் எல்லாம் இந்த அருளாளர் திருவடிகளில் விழுந்து வணங்கவில்லையென்றால் அதுதான் ஆணவம் எனக் கூறி பெருங்கூட்டம் சான்றாக நிற்க, அடியற்ற மரம் போல் விழுந்து வணங்கும் வண்ணம் அருளாட்சிச் செங்கோல் அரசாய், திருமடத்தின் தலைவராய் வாழ்ந்த அருளாளரே ஞானியார் அடிகள்.

ஞானியார் அடிகள் வீரசைவத் திருமடத்தின் அருளாட்சித் தலைவர். சைவசமய அருளாளர்களின், தத்துவவாதிகளின் கொள்கைகளைச் சாதாரணமக்களும் புரிந்து கொள்ளுமாறு பேசினார். அடிகளுக்குக் கிறித்துவமும் முஸ்லீம் கொள்கையும் வைணவத் திருவும் மிகமிக நன்றாகத் தெரியும். எந்த ஒரு கொள்கையையும் தாக்கியோ அக்கொள்கையாளர்களின் மனம் புண்படுமாறு பேசியோ சைவத்தை அவர் வளர்க்கவில்லை. சைவ சமயத்தின் உள்ளார்ந்த அற்புதங்களையும் கொள்கை உயர்வையும் கேட்போர் உளங்கொளுமாறு பேசியே சைவத்தை வளர்த்தார்.

அனைத்து மதத் தலைவர்களும் அடிகளிடம் நட்புப்

பேணியதோடன்றி, கிடைத்த நட்பைப் போற்றிப் பேணவும் தலைப்பட்டனர்.