பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

47


தமிழ்நாட்டில் தோன்றிய சமயமான சைவமும், வைனொமும் ஒரு கட்டத்தில் சமணத்தையும், பௌளத்தத்தையும் எதிர்த்துப் போராடின. ஆதி மதமான சைவத்தை எதிர்த்தும் வைணவம் போராடியது. சமணம், பெளத்தம், சைவம், வைணவம் ஆகியன மாறி, மாறி அரசு மதங்களாக விளங்கின. அரசு, ஏதாவது ஒரு மதம் சார்ந்ததாக இருந்தது.

தமிழகத்தில் பேரரசுகள் வீழ்ந்தபோது மதங்களின் சமுதாயப் பங்களிப்பும் சிதைந்தே போயிற்று. அதாவது குறுகிப் போயிற்று. அவற்றுள் பல்வேறு தத்துவ பிறழ்ச்சிகள் தோன்றின. அதனால் உட்பிரிவுகள் கணக்கற்றவை மலிந்தன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கிறிஸ்துவ சமயம் பரவும் முன்னே இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையர் (St.Thomas) சென்னை மயிலையில் கிறிஸ்துவின் கொள்கைகளை மக்களிடையே விரித்துரைத்தார்.

இசுலாத்தின் கொள்கைகள் நபிகள் மறைந்த ஒரு நூற்றாண்டு முடிவதற்குள் மலையாளக் கரையில் வேர்விடத் தொடங்கியது. பழந்தமிழ் நாட்டின் கிழக்கு, மேற்கு கடற்கரைகளில்வேர்விட்டு கிளைத்த கிறிஸ்தவமும், இசுலாமும் அரசு சார்பு மதங்களாக விளங்கின.

மொகலாயர்களின் வீழ்ச்சியும், அய்ரோப்பியர் வருகையும் இங்கே பல பாதிப்புகளை உருவாக்கி இருந்தன. விஜய நகரப் பேரரசின் எழுச்சி உருவாக்கியிருந்த தெலுங்கு மொழி ஆதிக்கம் தமிழ்நாட்டில் இன்று வரை இருப்பதைப் போலவே தொடர்ந்து அன்றும் இருந்து வந்தது.

தென்தமிழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரியார்களின் வருகையும், தரங்கம்பாடியில் வந்திறங்கிய அச்சியந்திர இயக்கத்தின் வளர்ச்சியும் ஓலைச் சுவடிகளுக்கு மெல்ல விடை கொடுக்கத் தொடங்கின.

18,19 ஆம் நூற்றாண்டுகள் உலகில் பல மாறுதல்களை உருவாக்கியது. அந்த மாறுதல்கள் தமிழ்நாட்டையும் எட்டின. ஆங்கிலேயன் ஆட்சியில் 'பழந்தமிழகம்' உருவாகி இருந்தது. அதற்குப் புதிய பெயர் - மெட்ராஸ் பிரசிடென்சி - சென்னை இராஜதானி என்று சூட்டியிருந்தார்கள். மேலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் - ஆங்கில ஆட்சியினர் கல்வி நீரோடையைப் பாய்ச்சத் தொடங்கினார்கள்.