பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

மக்சீம் கார்க்கி


“நான் இருளிலே வாழ்கிறேன்” என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்,

அந்தப் பலமும் திடமும் நிறைந்த கௌரவமான அந்த முஜீக்குக்காக அவள் வருத்தப்பட்டாள், அனுதாப்பட்டாள்.

அந்திரேய் ஒரே குதூகலத்தோடு திரும்பி வந்தான்.

தாய் அவனிடம் ரீபனைப்பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டுவிட்டு அவன் சொன்னான். “போனால் போகட்டும், கிராமங்கள் தோறும் அலைந்து திரிந்து நியாயத்தைப் பற்றி அவன் கூச்சல் போடட்டும்; அங்குள்ள மக்களை அவன் தட்டியெழுப்பட்டும், நம்மோடு ஒத்துழைப்பதென்பது அவனுக்குச் கொஞ்சம் சிரமம்தான். முஜீக்கின் கருத்துக்கள் தான் அவன் மூளை நிறைய இருக்கின்றன. நம்முடைய கருத்துக்கள் அவன் மண்டையில் ஏறாது. அதற்கு இடமும் கிடையாது.”

“அவன் படித்த சீமான்களைப்பற்றிப் பேசினான். அவன் சொன்னதில் ஏதோ கொஞ்சம் உண்மையிருப்பது போலத்தான் தெரிகிறது” என்று மிகவும் பதனமாகச் சொன்னாள் தாய். “அவர்கள் உங்களை ஏமாற்றிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!”

“அம்மா, அவர்கள் உங்களை ஏமாற்றிக் கெடுக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறிச் சிரித்தான் ஹஹோல், “அம்மா, நம்மிடம் பணம் மட்டும் இருந்தால்!...... இன்னும் நாம் பிறர் தரும் பணத்தைக் கொண்டுதான் நம் காரியங்களைச் செய்கிறோம். உதாரணமாக, நிகலாய் இவானவிச்சுக்கு எழுபத்தைந்து ரூபிள்கள் மாதச் சம்பளம்; அதில் அவன் நமக்கு ஐம்பது ரூபிள்களை நன்கொடையாகத் தருகிறான். அவன் மாதிரிதான் மற்றவர்களும் அரைப்பட்டினி கால்பட்டினியாகக் கிடந்து படிக்கும் கல்லூரி மாணவர்கள்கூட, காலும் அரையுமாக வசூலித்த காசுகளை நமக்கு நன்கொடையாக அனுப்பிவைக்கிறார்கள். சொல்லப்போனால், சீமான்களில் எத்தனையோ ரகம்; சிலர் விட்டுப்பிரிவார்கள்; சிலர் ஏமாற்றுவார்கள், அவர்களில் மிகவும் நல்லவர்கள்தான் நம்முடனே சேர்ந்து நமது கொள்கைக்காகப் பாடுபடுவார்கள்.....”

அவன் தன் இரு கைகளையும் தட்டிக்கொண்டு ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தான்.

“நம்முடைய இறுதி வெற்றிக்கு நாம் எவ்வளவோ தூரம் போயாக வேண்டும். எனினும் மேதின விழாவைச் சிறிய அளவிலாவது கொண்டாடுவோம். மகிழ்ச்சியாயிருக்கும்.”