பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

மக்சீம் கார்க்கி



10

நிகலாய் இவானவிச் அவளை உணர்ச்சி வெறியோடு வந்து சந்தித்தான்.

“இகோரின் நிலைமை மோசமாயிருக்கிறது” என்றான் அவன்; “ரொம்ப மோசமான நிலை! அவர்கள் அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்விட்டார்கள். லுத்மீலா இங்கே வந்திருந்தாள். உங்களை வரச் சொன்னாள்....”

“ஆஸ்பத்திரிக்கா?”

பதறிப்போன உணர்ச்சியோடு நிகலாய் தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டே, ரவிக்கை அணிந்து கொள்வதில் தாய்க்கு உதவினான்.

“இதோ—-இந்தக் கட்டையும் எடுத்துச் செல்லுங்கள்” என்று தனது வெதுவெதுப்பான ஈரப்பசையற்ற கரத்தால் தாயின் கைவிரல்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு. நடுநடுங்கும் குரலில் சொன்னான் அவன், “நிகலாய் வெஸோவ்ஷிகோவுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்து விட்டீர்களா?”

“ஆமாம்.”

“இகோரைப் பார்க்க நானும் வந்திருக்கிறேன்.”

தாய் களைப்பினால் மயங்கிப் போய் இருந்தாள். நிகலாயின் பதைபதைப்பு அவளது உள்ளத்தில் ஏதோ வரப்போகும் ஒரு ஆபத்தை அறிவுறுத்தும் பயத்தை எழுப்பிவிட்டது.

“அவன் செத்துக்கொண்டிருக்கிறான்” என்று இருண்ட எண்ணம் அவளது மனத்துக்குள்ளே துடிதுடித்துக்கொண்டிருந்தது.

வெளிச்சம் நிறைந்து சுத்தமான அந்தச் சிறு அறைக்குள்ளே நுழைந்ததுமே, வெள்ளை நிறமான தலையணைகளின் மீது சாய்ந்துகொண்டு நிகலாய் கரகரத்த குரலில் சிரித்துக்கொண்டிருப்பதைத் தாய் கண்டாள்; கண்டவுடன் அவளுக்கு ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. அவள் வாசற்படியிலேயே நின்று இகோர் டாக்டரிடம் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்டாள்:

“நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பது என்பது, சீர்திருத்தம் பண்ணுவது மாதிரிதான்....”

“உன் அசட்டுப் பேச்சைவிடு, இகோர்!” என்று கலங்கிய குரலில் சொன்னார் டாக்டர்.