பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

மக்சீம் கார்க்கி


கொண்டு நின்றான். அவள் இருமினாள். பயத்தால் பலமிழந்த கைகளால் தொண்டையைத் தடவிக்கொடுத்துக்கொண்டாள்.

“என்ன நடந்தது?” என்று அவனிடம் சிரமப்பட்டுக் கேட்டாள்.

“நீங்களே பாருங்கள்” என்று பதிலளித்துவிட்டு அவன் மறுபுறம் திரும்பிக்கொண்டான். மற்றொரு முஜீக் அங்கு வந்து அவளருகே நின்றான்.

ரீபினை அழைத்துக்கொண்டு வந்த போலீஸ்காரர்கள் ஜனக்கூட்டத்தின் முன் நின்றார்கள். ஜனங்கள் ஆரவாரமே இல்லாமல் நின்றாலும் கூட, வரவர ஜனக் கூட்டம் பெருகிக்கொண்டிருந்தது. திடீரென்று ரீபின் குரல் அவர்களது தலைக்கு மேலாக எழுந்து ஒளித்தது.

“உண்மை விசுவாசிகளே! விவசாயிகளான நமது வாழ்க்கையின் உண்மையையெல்லாம் எடுத்துக்காட்டும் பிரசுரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, அந்தப் புத்தகங்களுக்காகத்தான் நான் கைதானேன். அந்தப் புத்தகங்களை மக்களிடம் விநியோகித்தவர்களில் நானும் ஒருவன்!”

ஜனக் கூட்டம் ரீபினை நெருங்கிச் சுற்றிச் சூழ்ந்தது. அவனது குரல் அமைதியும் நிதானமும் பெற்று விளங்கியது. அதைக் கண்டு தாய் தைரியம் அடைந்தாள்.

“கேட்டீர்களா?” என்று இரண்டாவதாக வந்த முஜீக், அந்த நீலக் கண் முஜீக்கை லேசாக இடித்துக்கொண்டே சொன்னான். அவன் பதிலே கூறாமல் தன் தலையை மட்டும் உயர்த்தி, தாயை மீண்டும் ஒரு முறை பார்த்தான். இரண்டாவது வந்தவனும் அவளைப் பார்த்தான். இரண்டாமவன் முதல் முஜீக்கைக் காட்டிலும் வயதில் சிறியவன்; புள்ளி விழுந்த ஒடுங்கிய முகமும், சுருட்டையான கரிய தாடியும் கொண்டவன், பிறகு அவர்கள் இருவரும் சாவடி முகப்பிலிருந்து ஒரு புறமாக ஒதுங்கினார்கள்.

“அவர்கள் பயந்து போயிருக்கிறார்கள்” என்று நினைத்துக் கொண்டாள் தாய்.

அவள் மிகுந்த கவனத்தோடு இருந்தாள். அந்த முகப்பு வாசலில் அவள் நின்ற இடத்திலிருந்தே மிகயீல் இவானவிச்சின் கரிய வதங்கிப்போன முகத்தைப் பார்க்க முடியும். அவனது கண்களிலிருந்து பிரகாசத்தையும் அவள் காண முடியும். என்றாலும் அவனும் அவளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பியதால், அவள் தன் முன் கால்விரல்களை ஊன்றிக் கழுத்தை நீட்டிப் பார்த்தாள்.