பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

மக்சீம் கார்க்கி


அவன் மனம் புண்பட்டுப்போனது மாதிரி தோன்றியது. அவன் நிகலாயை அவநம்பிக்கையோடும் எதையோ கேட்கும் பாவனையோடும் பார்த்தான். நிகலாய் புன்னகை புரிந்தான்; எதுவும் பேசவில்லை.

“இந்த உலகம் பூராவையுமே நாம் இன்று எதிர்த்துப் போராடி, எல்லாவற்றையும் அடக்கியாள முடிந்தாலும் – நாளைக்கு மீண்டும் உலகமெங்கும் ஒரு புறத்தில் பணக்காரரும் இன்னொருபுறத்தில் ஏழைகளும் உற்பத்தியாகிவிடுவார்கள்–அப்புறம் இந்தப் போராட்டத்துக்கு என்ன அர்த்தம்? போதும், உங்களுக்கு ரொம்ப நன்றி, நீங்கள் எங்களை முட்டாளாக்க முடியாது–செல்வம் என்பது காய்ந்துபோன மணலைப் போலத்தான். அது ஓரிடத்தில் கிடக்காது. எல்லாத் திசைகளிலும் வாரியடித்துச் சிதறும். வேண்டாம். எங்களுக்கு அது வேண்டவே வேண்டாம்!”

“அதை நினைத்து நீ ஒன்றும் கோபவெறி கொள்ளாதே” என்று கூறிச் சிரித்தாள் தாய்.

“எனக்கு இருக்கிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான், ரீபின் கைதானதைப் பற்றிய துண்டுப்பிரசுரத்தை எப்படிச் சீக்கிரமே ஜனங்களிடம் பரப்புவது? என்று யோசித்தவாறு கேட்டான் நிகலாய்.

இக்நாத் உஷாராகி நிமிர்ந்தான்.

“அப்படி ஒரு பிரசுரம் இருக்கிறதா?” என்று கேட்டான்.

“ஆமாம்.”

“அதை என்னிடம் கொடுங்கள், நான் கொண்டுபோகிறேன்” என்று தன் கைகளைப் பிசைந்துகொண்டே சொன்னான் அந்த வாலிபன்.

அவனைப் பார்க்காமலேயே தாய் அமைதியாகச் சிரித்துக் கொண்டாள்.

“ஆனால், நீ களைத்து இருக்கிறாய். மேலும் நீ பயந்து கொண்டிருப்பதாக வேறு சொன்னாய்” என்றாள் அவள்.

இக்நாத் தனது அகன்ற கையால். தனது சுருட்டைத் தலை முடியைத் தடவி விட்டுக்கொண்டு, நேரடியாகச் சொன்னான்.

“பயம் வேறு. சேவை வேறு, எதை எண்ணிச் சிரிக்கிறீர்கள்? நீங்கள் ஓர் அற்புத ஆசாமிதான்.”

“அட, என் செல்லக்குழந்தை!” என்று தன்னையுமறியாமல் கூறினாள் தாய். தன் மனத்தில் எழுந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாதிருக்க முயன்றாள்.