பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

529



அவளது கண்களில் யாரோ ஒருவனின் சோகமான மங்கிய பார்வைபட்டது. அவளது மனத்தில் ரீபினின் முகம் தோன்றியது. சில கணநேரத் தயக்கத்துக்குப் பின்னர் அவளது உள்ளமும் உடலும் நிதானத்துக்கு வந்தன, இதயத்துடிப்பு சமனப்பட்டது.

“இப்போது என்ன நடக்கும்?” என்று அவள் சுற்றுமுற்றும் பார்த்தவாறே எண்ணிக்கொண்டாள்.

அந்த உளவாளி ஸ்டேஷன் காவல்காரனைக் கூப்பிட்டு அவனிடம் அவளைக் கண்ணால் சுட்டிக்காட்டி ஏதோ ரகசியமாகக் கேட்டான். அந்தக் காவலாளி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பிப் போனாள்; இன்னொரு காவலாளி வந்தான். அவனிடமும் அவன் ரகசியம் பேசினான். அதைக் கேட்டு அவன் முகத்தைக் சுழித்தான்.அவன் ஒரு கிழவன், நரைத்த தலையும் சவரம் செய்யாத முகமும் கொண்டவளாகத் தோன்றினான். அவன் அந்த உளவாளியை நோக்கித் தலையை ஆட்டிவிட்டு, தாய் அமர்ந்திருந்த பெஞ்சை நோக்கி வந்தான். அந்த உளவாளி அதற்குள் மறைந்து போய்விட்டான்.

அந்தக் காவலாளி நிதானமாக அவளிடம் வந்து அதிருப்தியுணர்ச்சியோடு தாயைப் பார்த்தான். அவள் பெஞ்சிலிருந்தவாறே குன்றிக் குறுகினாள்.

“இவர்கள் என்னை மட்டும் அடிக்காமலிருந்தால்!” என்று எண்ணினாள்.

அவன் அவள் முன் நின்றான். ஒரு நிமிஷம் பேசாது நின்றான்: கடுமையாகச் சொன்னான்:

“நீ என்ன பார்க்கிறாய்?”

“ஒன்றுமில்லை”

“அப்படியா? திருடி! இந்த வயசிலுமா திருட்டுப்புத்தி?”

அந்த வார்த்தைகள் அவளது முகத்தில் ஓங்கியறைந்தன. ஒரு முறை-இரு முறை! அந்தக் குரோதத் தாக்குதல் அவள்து தாடையையே பெயர்த்து, கண்களைப் பிதுங்கச் செய்வது மாதிரி வேதனை அளித்தது.

“நானா? நான் ஒன்றும் திருடியில்லை. பொய் சொல்கிறாய்” என்று தன்னால் ஆனமட்டும் உரத்த குரலில் கத்தினாள் அவள். அவமானத்தின் கசப்பாலும், கோபவெறியின் சூறாவளியாலும் அவளது சர்வ நாடியுமே கதிகலங்கிப் போயின. அவள் தோல் பெட்டியை உலுக்கித் திறந்தாள்.

“பாருங்கள்; எல்லோரும் பாருங்கள்!” என்று கத்திக்கொண்டே அவள் துள்ளியெழுந்தாள். அவளது கைகளில் ஒரு கத்தைப் பிரதிகளை எடுத்துக்கொண்டு தலைக்கு மேலே உயர்த்தி ஆட்டிக் காட்டினாள்.