பொருட்பால்
அரசியல்85
பொருட்பால் அரசியல் 85
43. அறிவுடைமை (கல்வி கேள்விகளினால் அறிவுடையவனாக இருத்தல்) 1. அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் -
உள்ளழிக்கல் ஆகா அரண். 421 அறிவு என்பது இறுதி வாராமல் காப்பாற்றுகின்ற கருவியாகும். பகைவர்களாலும் அழிக்க முடியாத உள்ளிருப்பதாகிய காவலிடமென்னும் கோட்டையாகும்.
2. சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. 422 மனத்தினை அது சென்ற வழியிலே போக விடாமல் தீமையிலிருந்து நீக்கி நல்லவையிடத்தே செலுத்துவது அறிவாகும்.
3. எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 423 எந்த ஒரு பொருளைப் பற்றியும் யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளினுடைய உண்மையான கருத்தின் பயனைக் காணும் வல்லமையுள்ளது அறிவாகும்.
4. எண்பொருள ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. 424 தான். பிறர் அறிந்து கொள்ளுவதற்கு எளிமையாக மனங்கொள்ளும் படியாகச் சொல்லி, பிறர் வாயில் கேட்கும் சொற்களில் நுணுக்கமான பொருள்களைக் கண்டறிய வல்லது அறிவாகும்.
5. உலகம் தழிஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. 425 உயர்ந்தோர்களை நட்பாக்கிக் கொள்ளுவது ஒருவனுக்கு அறிவுடைமையாகும். உலகத்தினைத் தழுவி நடப்பதும் அதுவேயாகும். அந்நட்பின்கண் முன் மலர்தலும், பின் குவிதலும் இல்லாமல் ஒரே நிலையில் நிற்பது அறிவாகும்.