பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

25


5. துன்பங்களில் அகப்பட்டுக்கொண்டோமே என்று அது தீருதல் பொருட்டு இழிவுதரும் செயல்களை நன் மக்கள் செய்வதில்லை. ஆகவே நீயும், அத்தகைய இழிசெயல்களைச் செய்து, துன்பத்திலிருந்து மீளும் செயல்களைச் செய்து விடாதே.

        இடுக்கட் படினும் இழிவந்த செய்யார்
        நடுக்கற்ற காட்சி யவர். (654)

6. அதிக வட்டியை எதிர்பார்த்து, உள்ள முதலையும் இழந்து விடுகின்ற தீயசெயல்களை அறிவுடைய மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே பின்னேவருகிற பொருளை எதிர்பார்த்து முன்னே உள்ள செல்வத்தையும் இழந்து வருந்துகிற கொடுஞ் செயலை நீயும் செய்யாதே.

        ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
        ஊக்கார் அறிவுடை யார். (463)

7. உனக்கு வரும் வருவாய் திடீரென்று குறைந்து விட்டாலும் வருந்தாதே. உடனே உன் செலவினத்தைக் குறைத்துக்கொள். அதனால் கேடு வராது. ஒரு குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்த வாய்க்காலின் நீர் தடைப்பட்டால் உடனே வடிகாலை அடைத்துவிடு. அதனால் நன்மை உண்டு.

       ஆகாறு அளவிட்டித் தாயினும் கேடில்லை
       போகாறு அகலாக் கடை. (478)

இந்த ஏழு குறள்களாலும், இதுபோன்ற பிற குறள்களாலும் செய்யத்தகாதவைகளை குறள் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறது.