பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

திருக்குறள்


எண் பொருள்-எளிதாக விளங்கும் சொற்கள்; செலச் சொல்லி- மனத்தில் பதியச் சொல்லி. 424

5.உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.

உலகத்தவரை நட்பாக்குவது ஒருவனுக்குள்ள நுண்ணறிவேயாகும். அந்த நட்பு முதலில் மிகுதியாகத் தோன்றுதலும், பிறகு நாளடைவில் குறைதலும் இல்லாமல் என்றும் ஒரே தன்மையாக இருக்கச் செய்வதே அறிவாகும்;

உலகம்-உயர்ந்தார்; தழீஇயது-தழுவிக் கொள்வது, நண்பராக்கிக் கொள்வது; ஒட்பம்-நுண்ணறிவு, தெளிந்த அறிவு; மலர்தல்-விரிதல்; கூம்பல்-குறைதல். 425

6.எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

உலகத்திலுள்ள பெரும்பாலோர் எவ்விதம் நடக்கின்றார்களோ, அந்த வகையினை அறிந்து அவர்கட்கு ஏற்ற வகையில் நடந்து கொள்வதே அறிவு.

எவ்வது-எந்த வகையால்; உறைவது-நடத்தல், ஒழுகுதல்; அவ்வது -அந்த வகையில்; உலகம் என்பதற்கு உலகத்திலுள்ள பெரியோர் என்றும் பொருள் கொள்ளலாம். 426

7.அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.

பிறகு நிகழ இருப்பதை முன்னதாகவே எண்ணி அறிந்து கொள்ளும் திறம் உடையவரே அறிவுடையவர்; அதனை அறிந்து கொள்ளாதவர் அறிவில்லாதவரே ஆவர். 427

8.அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாமல் இருத்தல் அறிவில்லாமையேயாகும். அஞ்ச வேண்டிய ஒன்றைக் கண்டு அஞ்சுதலே அறிவுடையோர் செயல் ஆகும்.

அஞ்ச வேண்டுவன: பாவம், கெடுதி முதலியன. 428