பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

திருக்குறள்


10.உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

தனக்குப் பொருள் உள்ள அளவினை ஆராய்ந்து பார்க்காமல், மேற்கொள்ளும் பரோபகாரத்தினால், ஒருவனது செல்வத்தின் அளவு விரைவில் குறைந்து விடும்.

உளவரை-உள்ள அளவு; தூக்காத-ஆராய்ந்து பார்க்காத; ஒப்புரவு- உலக நடை அறிந்து உதவி செய்தல்; வல்லை-சீக்கிரம், விரைவு. 480

49 காலம் அறிதல்


1.பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

தன்னை விட வலிதாகிய கூகையைக் காக்கை பகற் போதிலே வென்று விடும். அது போலப் பகைவரை வெல்லக் கருதும் அரசருக்கு அதற்கு ஏற்ற காலம் இன்றியமையாதது.

கூகை-கோட்டான்; இகல்-பகை. 481

2.பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.

காலத்தோடு பொருந்தத் தொழிலில் ஈடுபட்டு நடத்தல், நில்லா இயல்புடைய செல்வத்தை நீங்காமல் கட்டி வைக்கும் கயிறு ஆகும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல்-காலத்துக்கு ஏற்ற வண்ணம் செய்தல்; தீராமை-விட்டு நீங்காமல் இருக்கும்படி; ஆர்க்கும்-கட்டி வைக்கும். 482

3.அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின்.

செய்து முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஏற்ற காலத்தையும் உணர்ந்து செய்தால், மக்களால் செய்ய முடியாத அரிய செயல்களும் உளவோ? இல்லை.

அரு வினை-அரிய செயல்; கருவிகளாவன-மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களும் ஆகும். மூவகை