தலைவி கூற்று
“ஆண்பிள்ளை மடல் ஏறலாம்; பெண்பிள்ளை ஏறக்கூடாது. இது மரபு! மடலேறாத பெண் மதிக்கத் தக்கவள்; அதனால் அடங்கி இருக்கிறேன்!”
“மடல் ஏறாவிட்டால் போகிறது. மன்றம் ஏறி ஊரறியச் செய்வேன்; இருந்து இருந்து பார்த்தேன்; இவர் எந்த முயற்சியும் செய்வதுபோல இல்லை.”
“பெண் கிரகலட்சுமி, வீட்டைவிட்டு வெளியே கால் அடி எடுத்து வைக்கக்கூடாது என்கிறார்கள். என்னைத் தான் கிரகம் ஆட்டிப் படைக்கிறதே. தெருவுக்கு வந்தால்தான் வழக்கே தோன்றும். பூட்டை உடைத்தாகிவிட்டது; கதவு திறக்க வேண்டியது. நாணம் விட்டாகிவிட்டது; நியாயம் அடைய வேண்டியதுதான், இந்த ஊரார் என் தனிமை கண்டு நகைப்பர்; அவர்கள் இனி என் செயல் கண்டு திகைப்பர்.”
தலைவன் கூற்று
“உலையைத் தட்டுக்கொண்டு மூடி வைக்கிறோம். அது தாளம் போட்டுத் தன் கொதிப்பை வெளிக்குக் காட்டுகிறது. இனி மூடியை எடுத்துவிட வேண்டியதுதான்.”
“அலர் எழுந்தால்தான் எங்கள் காதல் உறுதிபெறும். காதலுக்குச் சாரம் இருந்தால்மட்டும் போதாது; காரமும் வேண்டும். உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே. ‘கிசுகிசுப்பு’ இல்லை என்றால் எங்கள் காதல் ‘மசமசப்புக்கு’ அர்த்தமே இருக்காது.”