பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
V
செந்தமிழ் வேந்தர் சு. ஸ்ரீபால், இ.கா.ப. அவர்கள்

(தமிழ்நாட்டுக் காவல்துறைத் தலைமை இயக்குநர்.

சென்னை - 600 004)
பாராட்டுரை

காடுவிட்டு நாடு வந்து, பறவைகள் கூடு கட்டி வாழ்வது கண்டு, வீடுகட்டி வாழத் தொடங்கிய காலத்திலேயே மனிதனுக்கு ‘மனம்’ என்னும் ஆறாவது புலன் அரும்பி, இயங்கி, மணம் வீசத் தொடங்கியது.

“அம் மனமே அன்பு, அருள், அகிம்சை, அழுக்காறாமை, அவாவறுத்தல் ஆகிய பண்பு நலன்களாகும். தொடர்ந்து, “தமக்கென வாழாப் பிறர்க்குரியர் ஆதல் வேண்டும்; செய்தி கொன்றோர்க்கு உய்தி இன்று; யாதும் ஊரே, யாவரும் கேளிர்; பெரியரை வியத்தலும் இலம்; சிறியரை இகழ்தல் அதனினும் இலம்: வாய்மையே மனத்தைத் தூய்மையாக்கும்; அத் தூய்மை பெறுவதே வாழ்வின் பயன்” என்பன போன்ற அறநெறிகள் கோவையாய் மனத்துள் எழத் தொடங்கின.

‘தான் கண்ட அறவழிகளைப் பிறரும் பின்பற்ற வேண்டும்’ என்று விரும்பினான் மனிதன்.

அவற்றைத் தொகுத்துச் சேர்ப்பன சேர்த்து, நீக்குவன நீக்கி வகைதொகைப்படுத்தி, வழங்கும் ஆற்றல், அக் காலத்திய மனிதன் அறியாத ஒன்று. அச் செயற்கரிய செயலைச் செய்யத் தோன்றினார் ஓர் அருளாளர்; அவர் பெயர் ‘குந்தகுந்தாச்சார்யார்’ என்பது.