பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 97 7. மக்கட் பேறு வாழ்க்கைத் துணை நலத்தைத் தொடர்ந்து வைத்திருக்கும் அதிகாரம் மக்கட்பேறு. அறத்தில் சிறந்தவன் அறன். அறத்தில் சிறந்தவள் அறனி. அறனும் அறனியும் இணைந்து நடத்துகிற இல்வாழ்க்கையின் ஈடில்லாப் பரிசு குழந்தைச் செல்வம். உடல் வளத்தைக் காட்டுவதில் அறிவியல் கண்டுபிடிப்பு Genes என்கிற உயிரணு மரபணு, வலுப்பெற்றிருந்தால் தான் உருவாகும் குழந்தையும், உடல்திறம், மனவளம் மிகுந்ததாகப் பிறக்கும். நோயுற்ற பெற்றோருக்கு, நலிந்த தாய் தந்தையர்க்கு உருவாகும் குழந்தைகள், ஊனமுற்றதாகப் பிறக்கும். இது இன்றைய விஞ்ஞானத்தின் விந்தையான விளக்கம். திருதராஷ்டிரன் கண் இழந்து பிறந்தது, பாண்டுவின் சோகைத்தனம். விதுரனின் திடமற்ற மனம் எல்லாம் பிறப்பின் குறை. பெற்றோரின் முறையற்ற கூடல் என்பதன் வெளிப்பாடு. அதனால்தான் முதலில் அறன் பற்றிய தகுதி, அதற்கடுத்தது அறனின் துணை நலத்திற்குரிய தகுதி, இந்த இரண்டு தகுதிகளும் இணைகிறபோது மிகுதியான வளம் பெற்ற குழந்தை பிறக்கிறது என்னும் உயர்ந்த கருத்தைக் கூறி, தீயவை தீண்டாத தேகம் கொண்டவராக ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று வற்புறுத்துகின்றார் வள்ளுவர். ஒழுக்கம் - அது இழுக்கினால் வழக்கு வழக்குக்கு கிடைப்பது தண்டனை என்று வள்ளுவர் தம் குறளில் விளக்குகிறார். நல்லொழுக்கம் உள்ள பெற்றோருக்குக் கிடைப்பது நன்மக்கட் பேறு. துன்மார்க்கம் செய்வோர்க்குக் கிடைப்பது துன்பக்கூறு. பேறு என்பது பெருமை. ஒரு அறனுக்குப் பிறக்கும் குழந்தை அவனது பரம்பரையின் வளர்ச்சி மட்டுமன்று அவன் புகழ், பெருமை, நடத்தை போன்ற எழுச்சியைக் காக்கும் பேறாக இருப்பதைக் குறிக்கவே வள்ளுவர் மக்கட் பேறு என்றார்.