பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


அவ்வியனுக்கு வந்திருக்கும் ஆக்கம் அவனைக் கெடுக்க வந்திருக்குமோ? செவ்வியனுக்கு வந்திருக்கும் கேடு அவனை உயர்த்த வந்திருக்குமோ? சிந்தித்துப்பார்!

வறுமை வந்ததன் பொருட்டுத் தீ வழி நடப்பவனுக்கு வந்த செல்வம், அவனைத் திருத்த இருக்காதா? செல்வம் வந்ததன் பொருட்டுத் தவறி நடக்கும் நல்லவனுக்கு வந்த வறுமையும் அவனைத் திருத்த இருக்காதா? சிந்தித்துப் பார்!

கெட்டவனுக்கு வந்த செல்வம் கெட்ட வழியில் தானே வந்திருக்கும். இது நல்லதா? நல்லவனுக்கு வந்த வறுமை நல்ல வழியில்தானே வந்திருக்கும். இது கெட்டதா? சிந்தித்துப் பார்!

அவ்வியனுக்கு ஆக்கம் வந்தால் அது அவனுக்கும் பயன்படாது. செவ்வியனுக்குக் கேடு வந்தால், அது அவனையும் வருத்தாது. இவற்றில் எது சிறப்பு? சிந்தித்துப் பார்!

அவ்வியனுக்கு வந்த ஆக்கம் செவ்வியனிடத்து இருந்தால் என்னவாகும்? செவ்வியனுக்கு வந்த வறுமை அவ்வியனிடத்திருந்தால் என்னவாகும்? நினைத்தாலே நெஞ்சம் நடுக்குறுமே. நடுக்குறாமல், சிந்தித்துப்பார்!

அவ்வியனுடைய ஆக்கத்தையும், செவ்வியனுடைய ஆக்கத்தையும் ஒப்பு நோக்கு. இவை நச்சுமரமும் பயன் மரமும் போன்று இல்லையா? சிந்தித்துப் பார்!

நல்வழி நடப்பவனுக்கு வந்த கேட்டையும், தீவழி நடப்பவனுக்கு வந்த கேட்டையும் ஒப்புக் நோக்கு. பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும், மண்ணின் குடமுடைந்தால் என்னாகும்? சிந்தித்துப் பார்!