பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௮௭


அந்தக் காலச் சூழ்நிலையின் புற அழுத்தமாகவும் இருக்கலாம். இந்நிலை இன்று வரை மாறவே இல்லை என்பதே நேரிடை இன்று திருவள்ளுவர் காலத்தை விட ஒரளவு குறைந்துள்ளதாகக் கூறலாமே தவிர, அந்நிலை அடியோடு மாறிவிட்டது என்று கூறிவிட முடியாது. இஃது, இங்கு மட்டும் அன்று; பெண்ணுரிமையும், ஆண், பெண் சமநிலையும் உரக்கக் கேட்கும் உலகப் பொதுவுடைமை நாடுகளிலும் கூட இதே நிலைதான். இன்னும் சொல்வதானால், உலக இறுதி வரையிலும் கூட இச்சமநிலைக் கோட்பாட்டில் சிறிது ஏற்றத்தாழ்வு இருந்தே வரும் என்பதே இயற்கை இயலாகவும் இருக்கலாம். கரணியம் ஆணியல் கூறுகள் சற்று வலிந்தனவாகவும். பெண்ணியல் கூறுகள் சற்று மெலிந்தனவாகவும் இயற்கையிலேயே இருப்பதை நாம் ஒப்புக்கொள்வதே சரியானதாகும்: அதுவே நடுநிலையானதுமாகும். இயற்கை நிலையில் அவ்வாறிருப்பினும், ஒரு வகையில் உலகியல் நிலையில், ஆணியலை அடக்கி ஆள்வது பெண்ணியலே என்பதையும் நாம் மறந்து விடலாகாது. இந்நிலை உலக உயிர்கள் அனைத்திலும் பொதிந்திருப்பதை நாம் உற்றுணர்தல் வேண்டும்.

மேலும், ஆனாளுமை என்பது ஒரு புறத்தியல் கோட்பாடே. அஃதாவது வெளியில் மட்டும் தெரியவரும் ஒரு புற உண்மையேயாகும். ஆனால் அகத்தியலாக இருந்து இயங்கும்; பெண்ணாளுமை என்பது ஆணியலையும் வழிநடத்தும், உள்ளிருந்து இயக்கும் ஒர் ஆற்றல் கூறாகும் என்று உற்று நோக்கி உய்த்துணர்ந்து கொள்க. இயற்கையில் புறத்தியலே பார்வைக்குரியதாகவும், அகத்தியல் உணர்வுக்குரியதாகவுமே உள்ளன. அஃதாவது ஆண்மை புறமாகவும், பெண்மை அகமாகவுமே இருந்து இயங்கி வருகின்றன; அதனால் ஆண்மை எடுப்பாகவும் பெண்மை படுப்பாகவுமே தோன்றி நிற்கும். இவ்வுண்மை உடலியல், அறிவியல், மனவியல், உயிரியல் முதலிய அனைத்துக் கூறுகளிலுமே இயங்கியலாக உலகியலாக நின்று இலங்கி வருகின்றதை உற்று நோக்கி உணரலாம். மற்றபடி ஆணாளுமை, பெண் அடங்குமை என்பவெல்லாம் உரிமையியலில் கூறப்பெறும் அல்லது கருதப்பெறும் ஒர் உலகியல் பூசலே என்க. ஆனால் இது காலப் போக்கில் சமநிலை பெறும் ஒரு புறவியல் கோட்பாடே என்க.

ஆனால், உயிரியங்கியலைப் பொறுத்த வரையில், ஆண்மையினும் பெண்மையே வலிவும் பொலிவும் பொருந்தியதாகும். இவ்விரண்டு தன்மைகளையும் இரும்புக்கும், பொன்னுக்கும் ஒப்பிட்டுக் காணுக. பொதுவாக வலிவைப் பொறுத்த நிலையில் இரும்பு வலியது, பொன் மெலியது என்பது ஒரு புறத்து உண்மையே! ஆயினும் பொன்னினும் இரும்பு பொலிவுடையதோ? பொருளுடையதோ? நிலைப்பாடுடையதோ?, அன்று, அண்று, அன்று என்க இரும்பு துருப்பிடித்து மண்ணோடு மண்ணாக மட்கும்; பொன் அவ்வாறு மட்குவதுமில்லை; மறைவதுமில்லை;