பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 9


இருந்த இடத்தில் இருந்து கொண்டு நீலத்திரையை ஒதுக்கினார் அவர். ஒதுங்கிக் கிடந்தன பஞ்சுப் பொதிகள். பெல்ஜியம் நிலைக்கண்ணாடி பிரதிபலித்துக் காட்டுகின்ற பஞ்சுக் கூட்டங்களின் நினைவை எண்ணமிட்டார். ஒட்டிக் கிடந்தது நீல வண்ணக் குழம்பு. ஐந்தாறு நீலோத்பல மலர்களை வெள்ளித் தட்டில் அடுக்கி வைத்துவிட்டு, அவற்றைத் தொலைவிலிருந்து படம் பிடித்தாற் போன்ற பாவனை ஒடியது அவருள். எஞ்சிய விதானத்திரை முழுவதும் ஒரே சிவப்பு. நஞ்சுக் கொடியின் உறவை விடாமல், தாயைத் தஞ்சமடைந்த அந்தப் பாசக் கொடியைத் துணை கொள்ளாமல், பிரசவ அறையிலே கிடந்து 'குவா, குவா' என்று குரலெழுப்பி, கால் உயர்த்திக் கிடக்கும் பச்சை மண்ணின் குதிகால் சிவப்பின் உவமையை உருவகப்படுத்திக் காட்டிற்று அவருக்குரிய இலக்கிய மனம்.

காப்பி குடித்ததாக அவர் தம்முள் நினைத்துக் கொண்டார். ஏனென்றால் சுவர்க் கடிகாரம் மணி நான்கு-இருபது என்று உரைத்தது. காலியாக இருந்த கண்ணாடிக் கிளாசை எடுக்க ராதா வந்து நின்றான். ஒவ்வொன்றுக்கும் மண்டையைப் போட்டு உருட்டிக் கொள்ளலாமா? இல்லை, அப்படி உருட்டிக் கொள்ளத்தான் முடிகிறதா?

புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது.

"அண்ணா, ஆபீஸ் தபால் ஏதாகிலும் இருக்கா? உங்க சொந்த லெட்டர்."

'சொந்த லெட்டர்' என்றதும்தான், ஞானசீலனுக்கு ஒரு விஷயம் சிந்தையில் குதித்தது. கடலூரிலிருந்து உறவினர் ஒருவர் கடிதம் போட்டிருந்தார். விஷயம் முக்கியந்தான் - அதாவது அவர் வரையில்! விளைவும்