பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


"பிறகு...? ”

ஞானசீலனின் கேள்விக்கு விடை பகர வந்தவளென அங்கு தோன்றிய வாணி, "நீங்கள் தவசீலியையே கல்யாணம் செய்து கொள்ளுங்க... அதுவேதான் தெய்வ சித்தமாகவும் இருக்க வேண்டுமுங்க. ஆமாங்க!" என்று ஏதோ முன்கூட்டியே தீர யோசித்து முடிவு செய்தவள் போன்று அவ்வளவு தீர்க்கமான குரலெடுத்து, சாவதானமாகக் கூறினாள்.

கனவுகளை வளர்த்தவளே கனவுகளை அழித்து விடப் பார்க்கிறாளே!

ஞானசீலனின் இதயம் அதிர்ந்தது. "வாணி, என்ன சொல்கிறாய்?"

"ஸார், ஆசிரியர் ஸார்! இதைப் பார்த்திருப்பீங்க; நீங்க பார்க்க வேணுமின்னுதான் ஒரு வாட்டி இந்த டைரியை உங்க பைக்குள்ளே திணிச்சேன். இப்ப திரும்பியும் ஒரு தரம் படியுங்க!"

அவர் பார்வைக்கு அந்தப் பழைய நாட்குறிப்புப் பக்கம் இலக்கானது. முன்னேற்பாட்டின்படி அப்பக்கத்தில் மட்டும் காகிதக் கிழிசல் ஒன்று செருகி வைக்கப் பெற்றிருந்தது. 'விழித்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டால் தோல்விகள் கண் உறங்கிவிடும் என்பார்கள். சரி, ஆனால், என் வாணி உறங்காமல்தான் இருக்கிறாள். அவளைப் போலவே விதியும் உறங்காமல் இருந்து தொலைக்கின்றதே? வாழ்க்கை எனும் பேரேட்டில் கனவுகள் வரவாகின்றன! ஆனால் முடிவில் ஐந்தொகை பார்க்கையில், ஏமாற்றங்களல்லவா நிகரலாபமாகின்றன? துன்பம் வரும்போது சிரிக்கச் சொல்கிறார்களே ?