பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 19



இருந்தது. பழக்கூடை சோற்றுக் கைப்பிடியில் அடங்கியது. சில்லறையை மொத்தமாக எண்ணி நீட்டினார் வந்தவர். வண்டிக்காரன் 'சொல்லிக் கொண்டு' புறப்படலானான்.

அந்த வீட்டின் தலைவாசலில் வலதுகாலை வைத்து நடந்தார் ஞானசீலன்.

ஞாயிறு போற்றுவோம்!

முன்னைப் பழவினையின் பின்னைப் பழங்கதைக்கு வாய்த்த புதுப் பொருளாம் அன்னை வடிவம் சமைத்துக் கொடுத்த பாசத்தின் தலைவாயில், தன் அடையா நெடுங்கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, "வா, மகனே, வா!" என்று முகமன் கூறி நிற்பது போன்றதொரு பிரமை அவருள் எழுந்து, பரவி, நிலைத்துவிட்டிருந்தது. உள்ளத்து உணர்வுகள் விழிப்புக் கொடுத்துக் கிடக்கையில், மனத்திற்குக் கற்பனா சக்தி கூடுதல். அது சமயம் இந்த மனம் எதையும் எண்ணும். எண்ணாமலும் இருக்கும். இப்படிப்பட்ட இரண்டுங் கெட்ட இரண்டும் கூடிய நிலைதான் பிரமை. இத்தகையதொரு கட்டத்தில் இதயத்தைப் பழக்கிவிட்டவர் அவர். காரணம் அவர் ஓர் எழுத்தாளர். அதாவது, எழுத்தை ஆளுபவர்; எழுத்தை ஆளுபவருக்கு மனத்தை ஆளத் தெரியத்தான் வேண்டும். என்றாலும், இந்த மனம் இருக்கிறதே, இது சமய சந்தர்ப்பங்களிலே எல்லோரையும் சோதித்துத்தான் தீரும்:

மனம் தத்துவம் படித்தது!

பாசத்திற்குத் தத்துவமா பெரிது?

ஊஹும் !

பாசத்துக்குப் பாசம்தான் பெரிது!

'அம்மா!...அம்மா!' என்ற நாமாவளி வளர்ந்த பாடல் பெற்ற கோயிலின் ஸ்தல விருட்சம் போன்ற ஓர் உருவம் தெரிந்தது.