34 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்
சுழித்தாள். ‘பெண்ணைப் பெற்றவர், மாப்பிள்ளையைப் பார்த்து முடிவு கேட்கிறதுக்காக உள்ளே தவம் செஞ்சுக் கிட்டு இருக்கார். இப்போது, இந்தப் பெண் பூஜைவேளைக் கரடியாக எங்கே வந்திருக்குது: ஆமா, யார் இந்தப் பெண்...?’
அம்மாவின் முகக் குறியீட்டு விளக்கங்களைத் துல்லியமாகப் படித்துக் கொண்டார் ஞானசீலன். வந்தவளுக்கு மரியாதை செய்ய வேண்டாமா? காப்பி கொண்டு வரும்படி வேண்டினார். காப்பி வந்ததும், கோசலை போய்விட்டாள். போகும் பொழுது, “இவங்க பெரிய கதாசிரியை. எங்க பத்திரிகையிலே தொடர் கதை-அதாம்மா ரொம்ப வருஷம் வருகிற பெரிய கதை எழுதப் போறாங்க...அதுக்காகத்தான் வந்துருக்காங்க தேடிப்போன மூலிகை காலிலே சிக்கினது போலத்தான், அம்மர்! இவங்க வந்திருக்கிறது. எங்க முதலாளி இவங்க கதையைப் போடுறதுக்கு எவ்வளவு தவம் இருக்கிறார்ன்னு உனக்கு எப்படி அம்மா புரியும்?..” என்று பூசிமெழுகிப் பேசி ‘பாவலா’ காட்டி அன்னையை உள்ளே அனுப்பிய மைந்தனின் போக்கை நம்பினாள், அவள்.
நம்பிக்கை என்பது சீமை உரம் போல.
மன நோய்க்கு நம்பிக்கையும், பயிரின் சீக்குக்கு உரமும் கைகண்ட பலன் இல்லையா?
தவசீலி சிரித்தாள்.
ஞானசீலன் சிலிர்த்தார்.
“ஸார், என் கதையைப் போடப் போகிறீர்களா, ஸார்?” என்று கள்ள விழிப் பார்வை விலக்கி, கன்னம் வழிச் சிரிப்பு உதிர்த்துக் கேள்வி கேட்டாள் அவள்.