40 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்
சூழலை மறந்து, சங்கீதப் பித்தானார் அவர் !...
ஞானசீலன், தன் அருகிலேயே நின்று கொண்டிருந்த வாணியைப் பற்றியே நினைவே இல்லாமல், சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். பதட்டத்துடன் புகை கக்கினார்; புகைச்சல் இருமலை வெளியிட்டார். பின்னர், எழுதி முடித்த கடிதத்தை எடுத்து அவள் வசம் சேர்ப்பித்தார்.
வாணி அந்தக் காகிதத்தை வாங்கி உரத்த தொனியில் படித்தாள், “என்னை நீ காதலிக்கிறாயா?” என்று.
“வாணி, இது என் கேள்வி. ஆகவே, பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உன்னுடையது!” என்று வாய் விட்டுச் சிரித்தார் ஞானசீலன்.
விடை மொழிய அப்பொழுது அங்கே வாணி பொட்டுப் பொழுதேனும் நின்றால்தானே?
‘நல்ல பெண்!..ஊம்!...’
7. “நெஞ்சே, நீ வா!”
டிசம்பர் பூவிற்கு ஒரு மகத்துவம் உண்டு. அது கண்ணில் பட்டுவிட்டால், பிறகு அவரது கருத்தைவிட்டு அகல மாட்டாது. அப்பூவைப் போல அந்தப் பூவை நின்றாள்; நிலைத்தாள். அவள் பெயர், வாணி !
மனோரஞ்சிதப் பூவுக்கு ஒரு மகிமை உண்டு. நெஞ்சைத் தொடும் வகைவகையான மணம் தரும் மணம் அதற்கு வாய்த்திட்ட நற்பேறு ஆகும். அந்தப் பூவை நிகர்த்திருந்தாள், இந்தப் பூவை. இவள் பெயரும் வாணிதான்!