திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 41
வாணியைப் பற்றிய நினைவுகள் நீண்டு விரிந்த செந்தாழை மடல் குருத்துப் பூக்களாக ஞானசீலன் மனத்தில் சிதறின; நறுமணத்தைச் சிதறின.
கமலப் பூவின் புற இதழ் மருங்கச் சிறப்பினை நினைவூட்டும் வண்ணம், வண்ணம் கொண்டிலங்கக் கொண்டிருந்தது அந்தி வானம்.
ஞானசீலன் கண்களை மூடி மூடித் திறந்தார்.
ஆசைகள் திறந்து திறந்து மூடிக் கொண்டன.
வாணியின் நினைவும் நினைவு முகமும் அவரை ஆட்டிப் படைத்தனவா? படைப்பின் சக்தியையே அவ்வாறு அலைக்கழித்தனவா?
வாணியை எண்ணமிட்டார் அவர்.
மனமேடையில் தலைப்பாகை திகழ, மணவறையில் குந்தியிருக்கப் போகின்ற காட்சி விரிந்தது!
எண்ணங்கள் அழுத்தம் பெற்ற தருணத்தில், நெஞ்சில் அழுத்திய பாவையென நினைவில் அழுந்தி நின்றாள் வாணி.
சிரித்த முகம்.
சிரிக்க வைக்கும் முகம் அது.
கனவு காட்டும் கண்கள்.
கனவுகளைக் காட்டச் செய்யும் கண்கள் அவை.
சிந்துரச் சிவப்பு உதடுகள்.
மந்தாரைப் பூவின் மயல் கொண்டவை அவை.
"ஸார், நான் நேற்றுத் தந்துவிட்டுப் போன லெட்டருக்குப் பதில் தயாரிச்சுப்பிட்டீங்களா!-வாணியின் முக விலாசத்தில் காணப்பட்ட எழில் அழுத்தம்தான், அப்போதைய அவள் கேள்வியில் தொற்றியது போலும்!