42 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்
அந்தக் கடிதத்தை அவர் மறு தரமும் பார்வையிட்டார். கதைகளைப் படித்து முடித்ததும், தீர்ப்பு வழங்கும் மனம் கொண்டு மீண்டும் மீண்டும் ஆராய்ச்சிப் பார்வையுடன் படிப்பதைப் போல, அப்பொழுது அவர் படித்தார்.
கடிதத்தின் கருத்து சுழன்றது:
“அன்பிற்குரியீர்,
வணக்கம் வரையில.
வரையிலா வரைநடுவே, அமைதியும் அழிவும் துயிலும் அலகிலா விளையாட்டுத் தெய்வத்தை எண்ணி எண்ணித் தவம் புரிய அதிர்ஷ்டம் படைத்திருந்தாள் மஹேஸ்வரி. அவளுக்குக் கிட்டிய பாக்கியமே அதுதான்.
ஒருவனை எண்ணித் தவம் இயற்றத்தக்க பேறு ஒருத்திக்குக் கிடைப்பதே நல் வாய்ப்புத்தானே?
இப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை உங்கள் அன்பு மனம் யாராவது ஒருத்திக்குக் கொடுத்துத்தான் தீர வேண்டும்.
இதற்கு மத்தியில் நீங்கள் சோதனையாளராக ஆகிவிடுவீர்களா?
என் கேள்வி இதுவே?
‘நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’
இக்கேள்வியில் புதுமை இருக்கலாம்.
என் எண்ணம் இது. உங்கள் பதில் எனக்குச் சாதகமாக இருந்து விட்டால், என்னைப் போலப் பாக்கியவதி அவனியில் யாருமே இருக்க முடியாது. அத்துடன், ஆண்டவனைப் போல நல்லவனும் இருக்கமாட்டான் !