பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்காப்பியத்தில்:

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்—”

என்று தொல்காப்பியத்தில் ஆற்றுப்படைக்கு ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் கடவுளின் அன்பர் கூறப்படவில்லையே எனச் சிலர் கழறுகின்றனர். ‘தொல்காப்பியம் ஓரளவிற்குத்தான் இலக்கணம் கூற முடியும்; உலகியல் அனைத்தையும் இலக்கண நூலில் அடக்கிக் கூறிவிட முடியாது.’ –என்பது நினைவிருக்கவேண்டும். அதே நேரத்தில், பழைய இலக்கண நூலில் கூறியுள்ளபடியேதான் இலக்கியம் எழுத வேண்டும்–புதுமாதிரி கூடாது என்று எவரும் கூறக்கூடாது. பழைய இலக்கணம் புதிய இலக்கியத்தின் வளர்ச்சியை முற்றிலும் கட்டுப்படுத்தலாகாது. ஈண்டு, “The golden rule is that there is no golden rule” — என்னும் அறிவுமொழி ஒப்பு நோக்கற்பாலாது.

நூற் சிறப்பு

திருமுருகாற்றுப்படை முருகனது தலைமைப் பெருமையைக் கூறும் மிகச் சிறந்த நூலாகும். ஆசிரியர் நக்கீரனார் தம் காலத்துப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நூலைச் சிறப்புற யாத்துளார். எனவே, காலக் கண் கொண்டு இந்நூற் கருத்துக்களை ஆராய வேண்டும். நக்கீரனாரின் தலைமைப் புலமைக்கு இந்நூல் மிகச்சிறந்த சான்றாகும்.

இந்நூற்குப் பழைய உரைகள் உள்ளன. அடியேனது உரை தெளிவான பொழிப்புரையாகும். இதனையும் ஏற்றருள வேண்டுகிறேன்.

சுந்தர சண்முகன்