பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 95



ஆனால், மேலோட்டமாகப் பார்க்கும்போது இப்பாடலின் பின் இரண்டு அடிகள் இக்கருத்துக்கு முரண் பட்டதுபோல் தோன்றுகின்றன. சற்று நின்று நிதானித்தால் முரணின்மை வெளிப்படும்.

‘புவனம், நீர், தீ, காற்று, இயமானன், வானம், இருசுடர்க் கடவுளானே' என்ற தொடரில், கடவுளானே என்ற சொல் நுண்மையான பொருளோடு அமைக்கப் பெற்ற சொல்லாகும். 'புவனம், நீர், தீ, காற்று, இயமானன், வானம், இருசுடர் ஆகியவற்றைப் படைத்து, அவற்றின் உள்ளே ஊடுருவியும், புறத்தே அவற்றைக் கடந்தும் உள்ளவனே' என்பது பொருளாகும்.

கட+உளானே என்பதால், படைக்கப்பட்ட இவற்றின் உள்ளேயும், - இவற்றைக் கடந்தும் உள்ளான் என்பது பொருளாகும். இப்பொருளை அறிந்துகொண்டால் முரணின்மை நன்கு வெளிப்படும்.

தகுதி பாராமல் அள்ளித் தருபவர்களை வள்ளல் என்று அழைப்பது உலக வழக்கு. தம் தகுதி பாராது திருவடிகளாகிய வீட்டையே தந்தார் ஆதலின் அவரையே வள்ளல் என்கிறார்.

68.கடவுளே போற்றி என்னைக்
கண்டுகொண்டு அருளு போற்றி
விட உளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி
உடல் இது களைந்திட்டு ஒல்லை .
உம்பர் தந்து அருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி 64

கண்டுகொண்டருளு-எப்பொழுதும் திருவருணோக்கம் செய். விட-இருவகைப்பற்றுக்களும் அகல. உள்-மனம். உம்பர்-வீட்டுலகம், ஒல்லை-விரைவாக.