பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 157



மையல்-மயக்கம். துழனி வெள்ளன்-ஆரவார வெள்ள முடையவன். வியன்-பெரிய பொள்ளல்-ஒட்டை.

எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்கொரு பயன் இருத்தல் வேண்டும். பயனில்லாத ஒரு சொல்லைக்கூடச் சொல்லாதே என்று அறநூல் (குறள்) சொல்கிறது. எனவே, பயனுள்ளவற்றைச் செய்யாமல் பயனில்லாத செயல்களை மிக்க ஆரவாரத்தோடு செய்யும் உள்ளீடற்றவராகிய தம்மை விட்டுவிடவேண்டா என்று வேண்டுகிறார்.

‘நீ எனக்கு அளித்த ஐந்து பொறிகளும் என் ஆன்மா உன்னை வந்து அடையவொட்டாமல், நெய்க்குடத்தை எறும்புகள் சுற்றி வருவதுபோலச் சுற்றிவந்து அல்லல் விளைக்கின்றன.”

நெய்க் குடம் தன்னை மொய்க்கும் எறும்பு என, என் பொறி புலன்கள் சுற்றிவருகின்றன. என்பதே இந்த உவமையின் விரிவாகும். இதனோடு நிறுத்திவிட்டால் இந்த உவமையின் பயன் நன்கு விளங்குமாறு இல்லை.

எறும்புகள் நெய்க் குடத்திற்கு வெளியே தரையில் சுற்றிவருகின்றன. 'மொய்க்கும்’ என்று கூறினமையின் தரையை அன்றிக் குடத்தின்மேலும் ஏறிப் புறப்பகுதியில் சுற்றுகின்றனவே தவிர அவை நெய்யை உண்ணுமாறில்லை என்பது பெற்றாம். அன்றியும் குடத்தைச் சுற்றியும் குடத்தின் புறத்தேயும் மொய்க்கின்ற எறும்புகள் அக்குடத்தைப் பிறர் எடுக்கவோ, அதிலுள்ள நெய்யை எடுத்துப் பயன்படுத்தவோ முடியாமல் செய்கின்றன. சுற்றிவருகின்ற எறும்புகள் தாமும் நெய்யை உண்ணவில்லை, பிறர் எடுத்து உண்ணவும் இடம் கொடுக்கவில்லை.