பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


வீறு அற்றல் போல்-தனித்தனியாகச் சிதறியதுபோல. கண் ஆர் இரவி-இடங்கள்தோறும் நிறைந்திருக்கின்ற சூரியன். கரப்ப- மறைக்க. தாரகைகள்-நஷத்திரங்கள். கண்ணாரமுதம்-அறிவில் நிறைந்த அமுதம். கண்அறிவு.

இப்பாடலின் முதல் இரண்டு அடிகள், பொழுது ஏறத்தாழ புலர்கின்ற தன்மையை ஓர் அழகிய உவமை மூலம் கூறுகின்றன. இறைவனிடம் செல்வதற்கு முன்னர் இத்தேவர்கள் அணிந்திருக்கின்ற முடிகளிலுள்ள நவரத்தின மணிகள் ஒப்பற்ற ஒளியை வீசிக்கொண்டிருக்கின்றன. இதே தேவர்கள் அண்ணாமலையான் திருவடிகளில் சென்று தங்கள் முடியுடனேயே வீழ்ந்து வணங்குகின்றனர். என்ன அதிசயம்! சற்று நேரத்திற்கு முன், பேரொளிக் கதிர்களை அள்ளி வீசிக்கொண்டிருந்த இம்மணிமுடிகள் இறைவன் திருவடியின் ஒளியின் எதிரே தங்கள் ஒளியை இழந்து மங்கிப்போய்விடுகின்றன.

மணி முடியைக் கூறினாரேனும், அதனை அணிந்துள்ள தலையையும், அதிலுள்ள அறிவையும் குறிப்பால் உணர்த்தியவாறாயிற்று. அமுதம் உண்டு இறவா நிலை பெற்றோம் என்ற அகங்காரம் அத்தலைகளினுள் பொதிந்து கிடக்கின்றது. அறிவு, அகங்காரம் என்ற இரண்டும் தம்மைவிட மேம்பட்டவர் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் குடியிருத்தலின், அவர்கள் முடிமணி ஒளி வீசி நிற்கின்றது. இது எவ்வளவு நேரம்? இறைவன் திருவடியைச் சென்று அடைகின்றவரை இந்நிலை நீடிப்பது உண்மைதான். அடிக்கமலம் சென்று இறைஞ்சியவுடன் தேவர்களின் தலையினுள் மீதுர்ந்திருந்த அறிவும் ஆணவமும் செயலிழக்கின்றன. திருவடியாகிய அருள் ஒளியின் எதிரே இவர்கள் ஆணவம் அழிக்கப்பட்டு ஒளி இழந்து நிற்பதை, இந்த உவமை மூலம் பெறவைக்கிறார் அடிகளார்.