பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. திரு அம்மானை

இள மகளிர் உருண்டையாக உள்ள பந்து வடிவான காய்களை, மூன்று அல்லது ஐந்து என்ற அளவில் கையில் எடுத்துக்கொண்டு, அவற்றை மேலே தூக்கிப்போட்டு தரையில் வீழாமல் பிடித்து ஆடும் ஆட்டம் அம்மானை எனப்படும்.

சங்க காலத்தில் கழங்கு ஆடுதல் என்ற பெயருடன் இவ்விளையாட்டு ஆடப்பெற்றது. ஆனால், சிலப்பதிகார காலத்திலேயே கழங்காட்டம் என்ற பெயர் மாறி, அம்மானை ஆட்டம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

இருவர் முதல் ஐவர்வரை வட்டமாக நின்றுகொண்டு, அவரவர் கையிலுள்ள காய்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து ஆடும் ஆட்டம் அன்று வழக்கில் இருந்தது. காய்களை மேலே தூக்கிப் போட்டு பிடிக்கும்போது ஒரு தாளகதிக்கு உட்பட்டே அது நடைபெறல் வேண்டும். இன்றேல், காய்கள் கீழே விழுந்துவிடும். இந்தத் தாள கதியை நிறைவு செய்ய, அதற்கு ஏற்ற சந்தத்தில் பாடல்கள் பாடப்பெற்றன. அம்மானைப் பாட்டின் அடிப்படை இதுவேயாகும்.

ஆடுவோர்கள் இளம்பெண்கள் ஆதலால், காதல்பற்றிய கருத்துக்கள் அன்றைய அம்மானைப் பாடல்களில் பெரிதும் இடம்பெற்றன. எனவே, காதல்பற்றிப் பாடப் பெறும் வரிப்பாடல்களில் இதுவும் ஒன்றாக எண்ணப் பெற்று, அம்மானை வரி என்றும் பெயர் சூட்டப் பெற்றது.

ஒரு நாடு முன்னேற்றம் பெறவேண்டுமானால் அந் நாட்டிலுள்ள மகளிர் முன்னேற்றம் பெறவேண்டும் என்பது இற்றைநாள் சமுதாய இயலார் கண்ட உண்மையாகும்.