பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 301


எப்பிறவியும் தேட-எல்லாப்பிறவிகளிலும் தேட. மெய்ப் பொருங்கண் தோற்றமாய்-அழியாப் பொருளாகிய ஆன்மா வினிடத்து விளக்கமாய். மெய்யே நிலைபேறாய்-சத்துத் தன்னேயே தமக்குநிலையான இடமாகக்கொண்டு. எப்பொருட்குந் தானேயாய் -எல்லாப் பொருளுக்கும் பற்றுகோடாய்.

தமக்கு நேர்ந்த அனுபவத்தை உற்றாராக இருக்கும் ஒருவரிடம் சொல்லி மகிழ்தல் எல்லா மக்களுக்கும் இயல்பாகும். அந்த அடிப்படையில் தோழிப் பெண்ணை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

இத்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றும் உடனிருந்த தோழி அதனைக் கண்ணால் காணாமல் இருந்தது வியப்பே ஆகும். எனவே 'மைப்பொலியும் கண்ணி கேள்’ என்று பாடல் தொடங்குகிறது. அதாவது மை தீட்டப் பெற்ற கண்கள் என்பது நேரடிப் பொருள். மை என்பதற்குக் குற்றம் என்ற பொருளும் உண்டு. இயல்பாகக் காணவேண்டியதைக் காணுவதே கண்ணின் தொழிலாக இருப்பவும், இத்தோழியின் கண்கள் அதைக் காணாதது, அவள் கண்ணின் குறைபாடே என்ற குறிப்புப் பொருளையும் தந்து நிற்கின்றன இச்சொற்கள்.

மால், அயன், இந்திரன் ஆகியோர் பல்வேறு பிறப்பெடுத்தும் இறைவனை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்களே தவிரக் கண்டபாடில்லை. அதாவது செல்வம், அறிவு, போகம் என்பன எத்தனையோ வகையான வடிவுகளைக் கொள்ளும். ஆதலால், எந்த வடிவெடுத்துத் தேடினாலும் அவன் கிட்டான் என்பதை அறிவுறுத்தவே எப்பிறவியும் தேட என்றார்.

'தேட' என்ற சொல்லிலும் ஒரு நயம் உண்டு. தேடுதல் என்ற தொழிலுக்குக் கர்த்தா ஒருவன் வேண்டும். அந்தக் கர்த்தா ஒன்றைத் தேடினான் என்றால், அவன் வேறு, தேடப்படும் பொருள் வேறு, தேடுதலாகிய செயல் வேறு என மூன்று உண்டு.