பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


தேடுபவன், 'நான் தேடுகிறேன்’ என்ற முனைப்புடன் இத்தொழிலைத் தொடங்குகிறான். அன்றியும், தன்னால் தேடிக் கண்டுபிடிக்கப்படும் பொருள் அது ஆதலால் அப்பொருள் தன்னைவிட மதிப்பில் குறைந்தது என்றே அவன் கருதுகிறான். எனவே, தன்முனைப்பு, தேடப்படும் பொருளைக் குறைத்து மதிப்பிடுதல் ஆகிய இரண்டு குற்றங்கள் இந்த மூவர் மாட்டும் இருந்தமை புலப்படும்.

'தேடிக் கண்டு கொண்டேன்’ (திருமுறை:4-9-12) என்ற பாடலில் நாவரசரே திருமாலொடு நான்முகனும் காணாத ஒரு பொருளைத் தாம் தேடிக் கண்டு கொண்டதாகச் சொல்கிறாரே-அந்தப் பாடலில் வரும் தேடி என்ற சொல்லுக்கு மேலே கூறப்பட்ட இரண்டு குற்றங்களும் வாராவா என்ற வினாத் தோன்றினால், அது நியாயமானதே ஆகும்.

தேடி என்ற சொல் இரண்டு இடத்திற்கும் பொதுவாயினும் தேடுபவர்கள் பண்பு காரணமாக ஓரிடத்தில் அது குற்றமாகவும், மற்ற ஓரிடத்தில் குற்றமில்லாதது ஆகவும் அமைகின்றது.

திருமால், நான்முகன் முதலியோர் சிவனையும் தம்முள் ஒருவராகக் கருதி, அவனைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று தருக்கி நின்றனர். அவர்கள் அவனைத் தேட முற்பட்டபோது தம் தருக்குக் காரணமாக அவனைக் குறைத்தும் மதிப்பிட்டனர். எனவே, அவர்கள் தேடலில் இரண்டு குற்றங்கள் அமைந்துவிட்டன.

நாவரசர் தேடும்போது தாம் எத்துணை இழிந்தவர் என்பதை அவர் மறந்ததே இல்லை. திருமால் முதலியவர்களால் காணப்பெறாத பொருளைக் 'கண்டு கொண்டேன்’ என்று சொல்வதால் பொருளின் பெரு மதிப்பை அறிந்து கூறினார் ஆயிற்று.

எனவே நாவரசர் தேடலில் குற்றமின்மை அறிக.