பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெற்றுச் சில காலம் கழிந்த பின்னரும் அடிகளார் மனத்தை விட்டு அது நீங்கவில்லை. அவன் விட்டுச் சென்றதற்கு உரிய காரணத்தைத் திருஅண்டப்பகுதியில் விளக்கினாரேனும், தம் ஒருவரைமட்டும் இங்கு ஒழித்துவிட்டுப் போன செயலுக்குத் தாமே காரணம் என்ற நினைவு அவரை விட்டு நீங்கவில்லை. முதலடியில் 'ஏனை யாவரும் எய்திடல் உற்று’ என்று குறிப்பதற்குரிய காரணம் இதுவேயாகும். இன்னதென்று அறியாத தேனை, ஆன் நெய்யை, கரும்பின் தேறலை என்று கூறுவதன் அடிப்படை யாது? இன்னது என்று அறிய முடியவில்லை என்று கூறியபிறகு தேனென்றும், நெய்யென்றும், தேறலென்றும் கூறுவது எவ்வாறு பொருந்தும்?

ஒரு பொருளை இது தேன் என்றோ, நெய் என்றோ அறிவது வேறு, சுவைப்பது வேறு. அறியாத என்ற சொல்லைப் பயன்படுத்தினாரேனும் உடன் போயினவர்கள்தவிரத் தாம் உள்ளிட்ட பிறர் அனைவரும் முழுவதுமாய்ச் சுவைக்கமுடியாத தேனாய், நெய்யாய், கரும்பின் தேறலாய் அவன் உள்ளான் என்பதே பொருளாகும்.

ஒரே இன்சுவையைத் தரினும் அந்தச்சுவை தரும் பொருள் தேனாகவும், நெய்யாகவும், தேறலாகவும் இருப்பதுபோல இவனும் சிவனாகவும், சிவலோகத்தை ஆள்பவனாகவும், குவளைக்கண்ணி கூறனாகவும் உள்ளான் என்க.

பெருந்துறை நிகழ்ச்சி நடந்து சிறிது காலமே ஆயினும் உணர்ச்சிப் பெருக்கால் அது நெடுங்காலம்போலத் தோன்றுதலின் ‘குறுகிலேன் நெடுங்காலம்’ என்றார். பிரிந்திருப்பவர்க்கு, ஒரு கணமும், ஊழியாகத் தோன்றும் என்பது பலரும் கண்ட உண்மையாகும்.