பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 85


கல்லா மனம் என்பது எத்தனை நன்னெறிகளைக் கேட்டாலும் அதனைக் கற்று அதன்படி நடவா மனம் என்ற பொருளைத் தரும். கல் ஆம் மனம் என்று பாடம் கொண்டால், கருங்கல் போன்று இறுகிய மனம் என்ற பொருளைத் தரும்.

61.

முடித்த ஆறும் என்தனக்கே
        தக்கதே முன் அடியாரைப்
பிடித்த ஆறும் சோராமல்
        சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்த ஆறும் துகில் இறையே
      சோர்ந்த ஆறும் முகம் குறு வேர்
பொடித்த ஆறும் இவை உணர்ந்து
      கேடு என்தனக்கே சூழ்ந்தேனே 57

சோராமல்-கைநழுவவிடாமல். குறுவேர்-சிறுவியர்வை. துகில்ஆடை. இறை-சிறிது.

தெளிவாகப் பொருள் காண முடியாதபடி மிகச் சிக்கலாக அமைந்துள்ள பாடலாகும் இது. இங்கு ஒருத்தி வாய் என்பது தொடங்கி ‘இவை உணர்ந்து' என்பது வரையில் வரும் தொடர்களுக்கு, திருமணம் ஆனவர், மனைவியை விட்டு வந்தபோது இக்குறிப்புகள் அவர் மனைவிபால் தோன்றின என்று உரை கூறியுள்ளனர்.

அடிகளார் மண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தவர் என்று, இவைபோன்ற பாடல்களை வைத்துக்கொண்டு பலரும் உரை கூறியுள்ளனர். வரலாற்று அடிப்படையில் திருவாதவூரரைப்பற்றி நாம் ஒன்றும் அறிய முடியவில்லை. இந்த நிலையில் தம்முடைய பழைய வாழ்க்கையை நினைந்து இங்குப் பேசுகிறார் என்று கொள்வதில் தவறில்லை. எந்த வயதிலும் எந்த நிலையிலும் இவ் வெண்ணங்கள் ஒரோவழி மனத்திடைத் தோன்றுவது இயல்பே ஆகும்.