பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கம் விற்ற படலம்

65

கட்டிய மனைவிக்குப் புதல்வன் பிறக்காத குறை அவனை அரித்துக் கொண்டு வந்தது. வேள்விகளும் விரதங்களும் மேற்கொண்டு சோம சுந்தரக் கடவுளை வழிபட்டு தான் பயனாக இனிய மகன் ஒருவனைப் பெற்றான். அதன் ஐந்து வயது இருக்கும் போதே வீரபாண்டியன் புலி வேட்டைக்குச் சென்று தன் உயிர் துறந்தான். திக்கற்ற அக்குடும்பத்தில் கேட்பார் இன்மையின் மூத்த புதல்வர்கள் வீடு புகுந்து அரச முடியையும் ஆபரணங்களையும் ரத்தினங்களையும் முத்துக் குவியல்களையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டனர். வீரபாண்டியனுக்கு அந்திமக்கடன் அனைத்தையும் அவன் இளைய மகன் செய்து முடித்தான்.

பட்டத்துக்குரிய வயதுக்கு வந்ததும் அவனை அரசனாக்குவதற்கு அமைச்சர்களும் நகரமாந்தர்களும் முற்பட்டனர். அவனுக்கு மணிமுடி சூட்ட அணிகலன்கள் வைத்திருந்த பேரறையைத் திறந்து பார்த்தனர். அங்கிருந்த விலையுயர்ந்த பொருள்களும் மாணிக்கக் கற்களும் இரத்தின முடியும் கொள்ளை கொண்டு போய்விட்டதை அறிந்தார்கள். மறுபடியும் அவற்றை அவர்கள் எங்குப் போய்ச் சேகரிப்பது பாண்டிய மன்னர்கள் தொன்று தொட்டு ஈட்டிய செல்வம் அனைத்தும் பறிபோய்விட்டன. என் செய்வது? பொன் செய்யும் வழி அறிந்திலர்; மன்னன் செய்த மடமை இது.

பாண்டியன் மகன் சோமசுந்தரரிடம் முறையிடப் பரிவாரத்தோடு சென்றான்; அரண்மனையை விட்டு அடியெடுத்து வெளியே கால் வைத்ததும் மாணிக்க வணிகர் ஒருவர் கோணிப்பை நிறைய மாணிக்கமும் நவரத்தினமும் கொண்டு வந்து அவன்முன் காட்டினார்.