பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரைந்துள்ளன. இன்னும் இந்தியத் திருநாடெங்கும் புகழ்பெற்று விளங்கும் இராமேசுவரம் திருக்கோயில் இந்த மன்னின் கட்டுமானக் கலைக்கு வழங்கிய காணிக்கையாக விளங்குகின்றன.

இந்த மன்னர்கள் காலப்போக்கில் வெள்ளையருக்கு எதிரான விடுதலை இயக்கத்தில் திவிரமாக ஈடுபட்ட காரணத்தினால் தங்களது தன்னரசு நிலையையும் சுயேட்சையான அரசியல் தலைமையையும் இழந்து குறுநில மன்னர்களாக (ஜமீன்தார்களாக) 19-ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் இருந்து வந்துள்ளனர். வளமையும் அதிகாரவரம்பும் சுருங்கிய இந்தப் பிற்காலச்சேதுபதிகளில் மிகவும் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர் துரைராஜா முத்துராமலிங்க சேதுபதி என்பவர் (கி.பி.1841 -1873) இவரது வாழ்வு மிகவும் குறுகிய காலமாக அமைந்திருந்த போதிலும், இவரது சாதனைகள் அளவிறந்தன.

அவர் ஒரு பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தார். தமிழ்ப் புலவராக, உடற்பயிற்சி வல்லவராக, குதிரை ஏற்றத்தில் தேர்ந்தவராக, பலரும் பாராட்டத்தக்க மேதையாகவும் விளங்கினார். இவர் ஒரு இசைப்புலவர், நிமிடகவி, புலவர்களைக், கலைஞர்களைப் பாராட்டி பொன்னும் பொருளும் வழங்கிய புரவலர் எல்லாவற்றிக்கும் மேலாக குமரக்கடவுளிடம் ஆழிய பக்தி கொண்டவர்.

இவரது தமிழ்ப் புலமைக்குச் சான்றாக, இவர் படைத்துள்ள இலக்கியங்கள் வாழ்க்கையை வளமுறச் செய்யும் நீதி போதனைகளைக் கொண்டதாகவும் உள்ளன.

2